யாழ்ப்பாணத்தை போன்று பாதி நிலப்பரப்பை கொண்ட சிங்கப்பூர் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டது: பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை
யாழ்ப்பாணத்தின் அரைவாசி நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூர் பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் நாம் எங்கு பிழை விட்டோம் என்பதை திருத்தாத வரை இலங்கை பொருளாதாரத்தில் முன்னேறமுடியாது என யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அரசசார்பற்ற நிறுவனமான சொண்ட் நிறுவனம் அண்மையில் ஏற்பாடு செய்த புதிய ஆட்சி மாற்றத்தின் மக்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வளமிக்க இலங்கை நாடு இன்று பொருளாதாரத்தில் தள்ளாடும் நிலையிலுள்ளமையை எண்ணிப் பார்க்கும்போது மனவேதனையை தருகிறது. 1942ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் எல்லோரும் நெல் அரிசிச்சோறு உண்ட ஆண்டாகப் பார்க்க முடியும்.
அதற்கு முன்னர் வசதி படைத்தவர்கள் சோறை உட்கொள்ள ஏனையவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை சோற்றை உட்கொண்டார்கள். அப்போதைய பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கையில் அரிசி இல்லாவிட்டாலும் சந்திரமண்டலத்திலிருந்து கொண்டுவருவேன் என கூறி மக்களிடம் வாக்குக் கேட்டு வெற்றி பெற்றார்.
இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் சரியான வழியில் கட்டியெழுப்பப்பட்டு வந்த நிலையில் எங்கு எப்படி பிழைத்தது என்பதே தற்போது கேள்வியாக உள்ளது. வருமானத்துக்கு அதிகமான வாழ்க்கைத் தரத்துடன் வாழ முடியாது. அது வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி, அல்லது தனி மனிதனாக இருந்தாலும் சரி.
265 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட சிங்கப்பூரில் 44 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் 440 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட யாழ்.குடாநாட்டில் பெறுமா 6 இலட்சம் பேரே வாழ்கின்றனர்.
அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீக்குவான் இலங்கைக்கு வரும்போது இலங்கையைப் போல சிங்கப்பூரை மாற்ற வேண்டுமெனக் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் சிங்கப்பூர் வீறுகொண்டு எழுந்து விட்டது. ஆனால் இலங்கை பின் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.
ஆசிய நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் குறுகிய காலத்தில் வளர்ந்து வருகிற நாடாக இந்தியாவைக் கூற முடியும். இந்தியாவின் பாரிய பொருளாதாரத்திற்குத் தமிழ்நாடு பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. இந்நிலைமைக்குத் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையே காரணமாக அமைகிறது.
இலங்கையில் வறுமையைப் போக்க என சமுர்த்தி நிவாரணத்தைக் கொண்டு வந்தார்கள்.வறுமை போய்விட்டதா? சமுர்த்தி பெறுபவர்களில் பலர் வருமானம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.
ஆகவே நாட்டுக்குக் கிடைக்கின்ற வெளிநாட்டு வருமானங்களைச் சிறந்த முறையில்
ஒழுங்குபடுத்தி அதனை உரிய முறையில் செலவு செய்யும் போதே நாடு சிறந்த
பொருளாதாரத்தை எட்ட முடியும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.