ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! அரசுக்குச் சஜித் எச்சரிக்கை
வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் எனப் போலி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு இன்று விவசாயிகள், அரச ஊழியர்கள் மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்கள் உட்பட இந்நாட்டின் 220 இலட்சம் மக்களையும் அனாதையாக்கி நிராதரவாக்கியுள்ளது.
அத்துடன், அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.06.2026) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் காலத்தில் விவசாய மக்களிடம் வாக்குக் கேட்டுப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரசு, இன்று அவர்களைக் கைவிட்டுள்ளது. தற்போது விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், உரம், யூரியா, களைக்கொல்லிகள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன.
அவதிக்குள்ளாகும் விவசாயிகள்
கிடைக்கும் உரமும் தரம் குறைந்ததாகவும், அளவு குறைவாகவும் உள்ளது. தமது நகை நட்டுக்கள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து விவசாயம் செய்த விவசாயிகள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர்.

நெல் கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைச் சட்டமாக்கித் தருவோம் எனக் கூறிவிட்டு, இன்று வரை அதனைப் பெற்றுக்கொடுக்காமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர்.
இதுமட்டுமன்றி, மனித - யானை மோதல்களினால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு இன்றுவரை நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படவில்லை.
இதேவேளை, அநுர அரசு அரச ஊழியர்களையும் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளது. நாட்டின் நிர்வாகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் முக்கிய பிரிவான பிரதேச செயலாளர்களுக்கு உரிய எரிபொருள் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகள் எவையும் அரசால் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக, தங்களின் சொந்தச் செலவில் எரிபொருள் அடித்துக் கடமையாற்ற முடியாது என அவர்கள் அறிவித்துள்ளனர். திங்கட்கிழமைகளில் வேறு கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்கள் தொடக்கம் சகல அரச சேவை ஊழியர்களும் தற்பொழுது கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.
அரச ஊழியர்களை ஓரங்கட்டிய அரசாங்கம்
விவசாயிகளையும் அரச ஊழியர்களையும் ஓரங்கட்டிய இந்த அரசு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத் துறையையும் தற்போது முழுமையாகச் சீரழித்துள்ளது. பாரம்பரிய சர்வாங்க மற்றும் நிபுணத்துவ வைத்தியர்களுக்கான எழுத்து மற்றும் பிரயோக பரீட்சைகளை அரசு இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன், 700 இற்கும் அதிகமான பாரம்பரிய சர்வாங்க மருத்துவர்களின் உத்தியோகபூர்வப் பதிவுகளும் தன்னிச்சையாகத் தடை செய்யப்பட்டுள்ளன அரசின் பலவீனமான மற்றும் முறையற்ற கொள்கைகள் காரணமாகவே ஒட்டுமொத்த பொதுமக்களும் இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, திறைசேரியில் காணப்படும் நிதியைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான அவசர நிவாரணங்களை உடனடியாக வழங்கி, அவர்களின் வாழும் உரிமையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மக்கள் நலனை விரும்பும் ஒரு பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக, மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை நாங்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் எப்போதும் விழிப்போடு நின்று போராடுவோம் என்றார்.
YOU MAY LIKE THIS VIDEO
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri