மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் - பிலெஸ்ஸ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று(30.03.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் நீடிப்பு
வாகனப் பதிவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் செய்தமை, வாகனங்களின் சேஸ் இலக்கங்களை மாற்றியமைத்து சட்டவிரோதப் பதிவுகளுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்தப் பாரிய வாகன மோசடிச் சம்பவம் தொடர்பில் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்தும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.