தடை தாண்டி ஒட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ள ரணிலின் வெற்றி இலக்கு நிச்சயமா...!
ரணிலின் பிரயத்தனம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரயத்தனங்கள் யாவும், எப்போது சாத்தியப்படும் என்பதை பொதுமக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
நாளாந்தம் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பிரசித்தப்படுத்தப்படுகின்றன.
ட்விட்டர் மற்றும் ஏனைய ஊடகங்களின் ஊடாக அவரின் செயற்பாடுகள், அவரின் ஊடகப்பிரிவினரால் பகிரப்படுகின்றன.
எனினும் அவர் நடத்திய மற்றும் நடத்தி வரும் முக்கிய சந்திப்புக்களின் மூலமான அறுவடை எப்போது வரும் என்பதையை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

74 வருட அனுபவம்
ஏனெனில் கடந்த 74 வருடங்களாக அரசியல்வாதிகள், மக்களுக்கு கூறுகின்ற விடயங்களை செயலில் காட்டுவதில் வெற்றிபெறவில்லை.
எனவே இதுவரை காலத்தில் அவற்றை பொறுத்துக்கொண்ட பொதுமக்கள், தற்போது பொறுமையின் எல்லையை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆகவேதான் ரணிலின் பிரயத்தனங்கள், எப்போது செயல் வடிவம் பெறும் என்பதை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சரி, மக்களின் இந்த எதிர்பார்ப்பை நாங்கள் குறைக்கூறமுடியாது.
இந்தநிலையில் அந்த எதிர்பார்ப்புக்களுக்கு சாதகமான மற்றும் பாதகமான ஏதுக்கள் என்னவாக இருக்கின்றன என்பதை ஆராயலாம்.
கோட்டாபயவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான், அமரிக்கா உட்பட்ட சில நாடுகளின் தலைவர்களுடனும், ராஜதந்திரிகளுடனும் தொடர்புகொண்டுள்ளார்.
இறுதியாக நேற்று அமரிக்க ராஜாங்க செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

ரணிலின் அச்சுறுத்தல்
எனினும் ரணில் பேச்சு நடத்துகின்றபோதும் எதுவும் நடக்கவில்லை. மாறாக, நாட்டு மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று அவர் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் பிரதமர் அலுவலலக தரப்புக்கள், ரணில் பேச்சுவார்த்தை பலாபலன்கள் இந்த மாத இறுதியில் இருந்து நாட்டுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளன.
எனினும் யதார்த்தத்தின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையிலேயே எந்தவொரு நாடும் இலங்கைக்கு உதவியளிக்கும்.

ஏனெனி்ல் கடந்த கால அனுபவங்களின்கீழ் இலங்கை அரசாங்கம் ஒன்றை நம்புவதற்கு எந்தவொரு மேற்கத்தைய நாடுகள் தயாராகயில்லை என்பதே காரணமாகும்.
அத்துடன் நிலையான ஆட்சி, மனித உரிமை மீறல்கள் உட்பட்ட பல்வேறு விடயங்களில் இலங்கை, கடந்த காலங்களில் தோல்விக்கண்டு வந்துள்ளமையும் ஏனைய காரணங்களாக அமைந்துள்ளன.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து, மேற்கத்தைய நாடுகள், இலங்கைக்கு உதவியளித்தாலும் அந்த உதவிகளுக்கு இந்தியாவின் ஆசிர்வாதம் நிச்சயம் இருக்கும் என்பதை நிச்சயம் கூறலாம்.

ஏனெனில், இதுவரை இலங்கையை ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றியது மாத்திரமல்லாமல், தமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் அண்டை நாடு என்ற அடிப்படையில் இலங்கை, இந்தியாவுக்கு முக்கியமான நாடாகும்.
அன்பின் பச்சை மனிதரே! உங்களால் அது முடியுமா..!