சர்வதிகாரிகள் தாம் ஆட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டா்கள்!, விரட்டப்படுவார்கள்!
சர்வதிகாரிகள் பதவி விலகமாட்டார்கள்
எந்தவொரு சர்வதிகாரியும் தாம் ஆட்சியில் இருந்து விலகப்போவதாக கூறமாட்டார் என்று கோட்டாகோகம போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.
கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கிய உறுப்பினராக செயற்படும் அருட்தந்தை ஜீவந்தர பீரிஷ் இந்த கருத்தை ஊடகம் ஒன்றுக்கான செவ்வியில் தெரிவித்துள்ளார்
தமது பதவிக் காலமான 2 வருடங்கள் முடிவடைந்தநிலையிலேயே தாம், பதவியை விட்டு செல்வேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளமை தொடர்பிலேயே ஜீவந்தரவின் கருத்து வெளியாகியுள்ளது.
எனினும் அவ்வாறான சர்வதிகாரிகள், பொதுமக்களின் போராட்டங்களாலேயே விரட்டப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாகோகம போராட்டக்களத்தில் கூடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுத்தப்படுத்தும் திட்டங்கள்
அதேநேரம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுத்தப்படுத்தும் திட்டங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ச, பதவியில் இருந்து விலகவேண்டும் என்பதே தமது இறுதிக் கோரிக்கையாகும் என்றும் அருட் தந்தை ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம், இரத்தம் தோய்ந்த போராட்டம் என்ற மகிந்த ராஜபக்சவின் கருத்து தொடர்பில், தமது கருத்தை அவர் வெளியிட்ட அவர், ஆட்சியை பிடிப்பதற்காக, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக மகிந்த ராஜபக்ச தரப்பினர் மேற்கொண்ட இரத்தம் தோய்ந்த செயல்களை, தற்போது காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது திசைதிருப்பும் கருத்தே இது என்று குறிப்பிட்டுள்ளார்.
பன்மைத்துவ போராட்டங்கள்
காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பிரிவு போராட்டங்கள் தொடர்பில் கருத்துரைத்த அவர், இது போராட்டத்தில் ஏற்பட்ட பிரிவு அல்ல என்றும், போராட்டத்தின் பன்மைத்துவ வெளிப்பாடுகள் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 5 தடவைகள் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவினால், நாட்டை காப்பாற்ற முடியாது என்று குறிப்பிட்ட அவர், கோட்டாபய, ரணில் விக்கிரமசிங்க உட்பட்டவர்களை அகற்றும் வரையில் வருடங்களானாலும் போராட்டம் ஓயாது என்று எச்சரித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும்
இதேவேளை நாட்டின் பிரச்சினைக்கு தீர்வை காண, அரசியலமைப்பில் மாற்றங்கள் அவசியம், அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்படவேண்டும், அத்துடன் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
21வது திருத்தம் என்பது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்று அருட்தந்தை ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எனவே அதிகார பசி கொண்ட ஆட்சிமுறையில் மாற்றம் வேண்டும் என்பதற்கான அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிப்பதே காலிமுகத்திடல் போராட்டத்தின் நோக்கம் என்றும் அருட்தந்தை ஜீவந்தர பீரிஷ் தெரிவித்துள்ளார்.