மணிப்பூரில் இடம் பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாகாணத்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக இடம் பெறும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகவும் உலக நாடுகள், இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது மன்னாரில் இன்றைய தினம் (17.07.2023) திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
மன்னார் நகர் சுற்றுவட்ட பகுதியில் மன்னார் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும்
சிறுபான்மை இன மக்களை துன்புறுத்தும் தீவிரவாத அமைப்புக்களை உடனே தடை செய், உடைக்கப்பட்ட எரிக்கப்பட்ட வீடுகள், ஆலயங்களை உடனே புனரமைப்பு செய்து கொடு, சர்வதேசமே இந்திய கிறிஸ்தவர்களை உடனே கவனி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி விசாரணை உடனே செய் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் பதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும்.
அதே நேரம் இந்திய மத்திய அரசு இந்த கலவரத்திற்கு காரணமான தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |