பெருந்தொகை நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!
தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக(PCoI), 504 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இதில் 2020 ஆம் ஆண்டில் மிகப் பெரிய தொகையான 120 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஆணைக்குழுக்கள்
பொதுவாக இந்த குழுக்களின் கண்டறிவுகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பயனுள்ள முடிவுகளை தந்ததா என்பதை அளவிட முடியவில்லை.
2015, மார்ச் 3 (03.03.2015) மற்றும் இந்த ஆண்டு ஜூன் 30ஆம் (30.06.2022) திகதிக்கு இடையில், சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கான பணம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் ஐந்து சிறப்பு ஆணைக்குழுக்களை நியமித்தார். இதற்காக அவரது பதவிக்காலத்தில் 337 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இவை அரசியல் பாதிப்புகளை விசாரணை செய்தல், எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தல், முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியை மதிப்பிடுவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரணை செய்தல் மற்றும் இலங்கை சுங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களாகும்.
நல்லாட்சி அரசாங்கம்
2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நல்லாட்சி அரசாங்கத்தின் முதல் மூன்று வருடங்களில், ஐந்து ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றுக்கு 254 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாரிய மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகள்
(PRECIFAC) தொடர்பான விசாரணைகள், திறைசேரி பத்திரங்களை வழங்குதல் தொடர்பான
விசாரணை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா
ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை, அவரது சொந்த அரசாங்கத்தின்
மோசடி மற்றும் ஊழல் விசாரணை, மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு
தொடர்பான விசாரணை என்பவற்றுக்காக இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.