சுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி - நெருங்கிய நண்பரை காப்பாற்ற அறிக்கையை மறைத்த ஜனாதிபதி
இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக நாடாளுமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் Red Channel ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 40 அடி கொள்கலன் ஒன்றை சோதனையிட்டபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
பெரிய மோசடி
வாகன உதிரிப் பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகன இருக்கைகள் அடங்கியிருந்த அந்தக் கொள்கலனை முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் சோதனையிட்டு, எந்தவித பிரச்சினையும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்திருந்தன.
எனினும், சுங்கத் திணைக்களத்தின் மத்திய விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மூன்றாவது சோதனையின்போது 85 வகையான பொருட்கள் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவற்றில் 45 வகையான பொருட்கள் சுங்கத் திணைக்களத்திடம் அறிவிக்கப்படாதவை எனவும், அவற்றின் கீழ் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 355 பொருட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாத 122 வாகன இருக்கைகளும், ரிம்களுடன் கூடிய 18 டயர்களும் அந்தக் கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்
இந்த மோசடியில் தொடர்புடையவர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரி ஒருவர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் உயர் பதவியொன்றை வகிக்கும் ஜனாதிபதியின் நெருங்கிய நபர் எனவும் டி.வி. சானக குறிப்பிட்டார்.

இது தொடர்பான புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், தனது நெருங்கிய நபரைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
இந்த ஊழல் தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும், நீதித்துறைக்கு கூட அழுத்தம் கொடுத்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
You may Like this..