இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்த கோரிக்கை
இலங்கையின் வர்த்தக தலைநகர் கொழும்பின் பெரும் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
இந்த சட்டம் 2022, செப்டெம்பர் 24 அன்று வெளியிடப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர், 84 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர்களை விடுவிக்கக் கோரிய போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தியிருந்தனர்.
உத்தியோகபூர்வ இரகசிய சட்டம்
இலங்கை அரசாங்கம், செப்டம்பர் 23 அன்று, மத்திய கொழும்பில் பொது வீதிகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இந்த ஒழுங்குமுறையின் கீழ், குறித்த பகுதிகளுக்குள் யாரையும் கைது செய்ய பொலிஸாருக்கு பரந்த அதிகாரம் உள்ளது மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேல் நீதிமன்றம் மட்டுமே பிணை வழங்க முடியும்.
எனவே இந்த கடுமையான கட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவதையும், நீண்டகாலமாக காவலில் வைப்பதையும் உறுதிப்படுத்துகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மீனாட்சி கங்குலியின் கருத்து
இதன்போது கொழும்பில் பொதுமக்களின் எதிர்ப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய ஒழுங்குமுறை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சமீபத்திய அவநம்பிக்கையான முயற்சியாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க போராடிக்கொண்டிருக்கும்போது, அரசாங்கம் மக்களின் குரல்களைக் கேட்பதை எளிதாக்க வேண்டும், அவர்கள் பேசும்போது சிறையில் தள்ளக்கூடாது.
மனித உரிமைகள் சட்டம்
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் இலங்கைக்கு கடமைகள் உள்ளன.
எனினும் இலங்கையின் புதிய ஒழுங்குமுறை மனித உரிமைகள் சட்ட தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உரிமைகள் தொடர்பில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் என்பவற்றை தடுப்பதற்கு, வலுவான ஜெனிவா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் மிகவும் முக்கியமானது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கு அமைதியான முறையில் அழைப்பு விடுக்கும் இலங்கையர்கள்
இப்போது வன்முறை, கைது மற்றும் நீண்டகால தடுப்புக்காவலில் இன்னும் பெரிய
அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.