மத்திய கிழக்கில் அமைதியே இலங்கையின் எதிர்பார்ப்பு! அரபு நாட்டுத் தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வந்து விரைவில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (08.04.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
ஜனாதிபதி கவலை
போரில் சம்பந்தப்படாத நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போதைய போர்ச் சூழலுக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் வலுசக்தித் தேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைக்கு அரபு நாடுகள் வழங்கி வரும் பங்களிப்பை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
அதிகபட்ச ஒத்துழைப்பு
அத்துடன், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், எகிப்து, பலஸ்தீனம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், ஈராக், குவைத், லிபியா ஆகிய நாடுகளின் தூதரகப் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அமைச்சர்களான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.






ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 20 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam