புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையில் மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
தலதா மாளிகை விஜயம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்கு இன்று(1.1.2026) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு, தலதா மாளிகையைத் தரிசிக்க வந்த மக்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மல்வத்து விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பெட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மல்வத்து மகா விகாரையின் பிரதிப் பதிவாளர், ராஜகீய பண்டித தர்ஷனபதி மகாவெல ரத்தனபால நாயக்க தேரரும் இந்தச் சந்திப்பில் இணைந்துக் கொண்டுள்ளனர். அந்த சமயத்தில், பிரித் பாராயணம் செய்த மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியுள்ளார்.
மல்வத்து மகா விகாரையின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் ஜனாதிபதி சந்தித்து நலம் விசாரித்ததை தொடர்ந்து, அஸ்கிரி மகா விகாரைக்கு சென்று, அஸ்கிரி மகா விகாரையின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி தெரிவித்த அஸ்கிரி மகாநாயக்க தேரர், “மக்களுக்குச் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசு முன்னெடுக்கும் திட்டங்களை புத்தாண்டில் புதிய பலத்துடன் செயற்படுத்த வேண்டும்” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்
அதன்பின்னர், ஜனாதிபதி, அஸ்கிரி தரப்பு அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த தேரரைச் சந்தித்து, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்த சவாலை எதிர்கொள்ள அரசு செயற்படுத்திய திட்டம் குறித்து ஜனாதிபதி, மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கு மகாசங்கத்தினர் தமது ஆசிகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸா நாயக்க உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.




