இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் பிரபல பெண்மணி கைதாகலாம்..
அடுத்த சில நாட்களுக்குள் நாட்டில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கைது செய்யப்படலாம் என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில அரசாங்கங்களின் போது நடந்த பல சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள்
கடந்த காலங்களில் இந்த சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தப் பெண் மீது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்படுகின்றது.

இதேவேளை, தற்போது அதிகாரத்தில் இருக்கும் அநுர அரசாங்கமானது ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு வழங்கியிருந்தது.
அதில் பிரதானமானது, ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட கடந்த கால அரசியல்வாதிகள் மீதான விசாரணை மற்றும் கைது நடவடிக்கையாகும். ஏற்கனவே, தொடர்ந்து வந்த பல ஆட்சியாளர்களின் ஊழல் குற்றங்களால் விரக்தி அடைந்த மக்கள் அநுர தரப்பு கொடுத்த வாக்குறுதிகளை ஏற்று ஆட்சியமைப்பதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கி அதிகாரத்தில் அமர வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அநுர தரப்பு ஆட்சிக்கு வந்தப்பின்னர் செல்வாக்கை இழந்துள்ள பல முன்னாள் அரசியல்வதிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அநுர தரப்பு கொடுத்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கைது செய்யப்படப் போகும் அரசியல்வாதிகள்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அநுர அரசாங்கம் மறந்துள்ளதாகவும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தைப்பெற்றுக் கொண்டதாகவும் தீவிரமாக பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தீவிரமாக முயற்சிக்கும் அநுர தரப்பு ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பல அரசியல்வாதிகளின் கோப்புக்களை தூசு தட்டி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன்படி, பல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பல அரசியல்வாதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இனிவரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாகவும், அவர்களுள் இலங்கையில் மிகப் பிரபலமான - சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்சவை சொத்துக் குவிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.