வடக்கில் திடீரென தோன்றிய அரசியல் அணிகள்! சுமந்திரன் ஆதங்கம்
எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சாடியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
கட்சியின் நிலைப்பாடு
"ஏனைய கட்சிகளைப் போல் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்திவிட்டு அந்த விடயம் வெளியில் தெரியவந்தவுடன் காலவரையின்றி பிற்போட்டுவிட்டோம் என்று சொல்வதும், அந்தக் கட்சியில் இருந்து இன்னொருவர் அப்படி ஒரு கூட்டம் நடக்கவே இல்லை.
ஊடகங்கள் பொய் சொல்கின்றன எனப் பொய்களைச் சொல்லும் வழக்கம் எங்களுடைய கட்சியில் இல்லை. ஆகவே, கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திய கட்சியின் தலைவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
சமஷ்டி அடிப்படையில் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரேயொரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகும். அதற்காக நாங்கள் ஏனைய கட்சிகளைப் புறக்கணிக்கவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற கையோடு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்களுடைய ஆணையை ஏற்றுக்கொள்கின்றோம் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.
மக்கள் தவறு இழைத்தார்கள் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் கூறவில்லை. ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என 1956ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை இந்த நாட்டின் அரசுகள் கண்டுகொள்வதில்லை.
மக்கள் தீர்ப்பை அரசு ஏற்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தற்போது இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை மதியுங்கள் என ஏனைய கட்சிகளுக்குக் கூறுகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
