மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கக் கோரி அரசுக்குப் பொதுஜன பெரமுன கடும் அழுத்தம்
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குவது குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16.06.2026) நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண மற்றும் டி.வி.சானக்க ஆகியோர் கலந்துகொண்டு விவரங்களை வெளியிட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், "திறைசேரியில் ஒரு டிரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி உபரியாக இருப்பதாக ஜனாதிபதியும் நிதியமைச்சருமானவர் பெருமையுடன் கூறி வருகின்றார். மக்களின் வரிப்பணம் மற்றும் கருவூல பிணைமுறிகள் மூலம் திரட்டப்பட்ட இந்நிதியை கருவூலத்திற்குள் முடக்கி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை. இதனால் பிணைமுறிகளுக்கான வட்டிச் சுமையே அதிகரித்து, தற்போது நூறு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் முதன்மைப் பொறுப்பு கருவூலத்தைப் பணக்காரமாக்குவது அல்ல, மக்களைப் பாதுகாப்பதே ஆகும்" என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய யோசனைகள் மற்றும் கோரிக்கைகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள்
நிலையான வைப்புகளுக்கு விசேட வட்டி
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் மிகக் கவலைக்கிடமான முறையில் 0.5 சதவீதம் வரை வீழ்த்தப்பட்டுள்ளது. முதியோர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களின் வைப்புகளுக்கு 15 சதவீத விசேட வட்டி விகிதத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

அரச ஊழியர் சம்பள உயர்வு
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நெருங்கும் நிலையிலும் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. எனவே, அவர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் 5 சதவீதத்தை உடனடியாக தற்காலிக ஆறுதலாகச் சேர்க்க வேண்டும்.
எரிபொருள் கொடுப்பனவு திருத்தம்
அமைச்சர்கள் தவிர்ந்த ஏனைய அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவை, தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப அடுத்த ஆறு மாதங்களுக்குத் திருத்தியமைக்க வேண்டும். கல்வி, வரி நிவாரணம் மற்றும் தொழில்துறை மறுமலர்ச்சி குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்.
மாணவர் மதிய உணவு மானியம்
பாடசாலைகளுக்கு பசியோடு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஒரு மாணவனின் மதிய உணவிற்காக ஒதுக்கப்படும் 100 ரூபாய் தொகையை 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
வற் வரி நீக்கம்
கல்வி உபகரணங்கள், அச்சிடப்பட்ட புத்தகங்கள், தெரிவு செய்யப்பட்ட மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வற் வரியை உடனடியாக நீக்க வேண்டும்.
தொழில்துறைக்கான சலுகைகள்
செஸ் வரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் மறுமலர்ச்சிக்காக 300 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் கூடிய சலுகைக் கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். விவசாயம், மீன்பிடி மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க பின்வரும் யோசனைகளை முன்வைத்தார்.
விவசாயிகளுக்கு உரம்
'சூப்பர் எல் நினோ' காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள உணவு நெருக்கடியை எதிர்கொள்ள, விவசாயிகளுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபா பண மானியத்துக்குப் பதிலாக, 50 கிலோ கிராம் எடையுள்ள உர மூடையொன்றை 3 ஆயிரம் ரூபா சலுகை விலையில் வழங்க வேண்டும்.
கடற்தொழிலாளர்களுக்கான எரிபொருள்
மானியம் கடல் சீற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர் சமூகத்துக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 150 ரூபா மானியம் வழங்கப்பட வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டு நிபுணர்கள்
வெளிநாட்டுப் பணத்தை அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு விசேட வட்டி வழங்க வேண்டும். மேலும், உள்நாட்டு நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அவர்கள் மீதான புதிய வரிகளை நீக்கி, பழையபடி முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
ஐ.எம்.எவ். நிபந்தனைகளும் நிதி ஒதுக்கீடும்
இந்த ஒட்டுமொத்த நிவாரணத் திட்டங்களுக்கு மாதத்துக்கு 113 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி இதற்கு அதிகபட்சம் 100 பில்லியன் ரூபாவே செலவிட முடியும் என்பதால் இதனைச் செய்ய முடியாது என அரசு வாதிடக்கூடும்.
எனினும், அவசர மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காலங்களில் இந்த எண்களை மாற்றியமைக்க உடன்படிக்கையிலேயே தெளிவான இடமுண்டு என்பதால், அரசு உடனடியாக அடுத்த ஆறு மாத காலத்துக்கு இந்த நிபந்தனைகளில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam