பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் வழக்கு தொடர முடியாது..! ஹரக் கட்டா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டா வழக்கில், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹரக் கட்டா உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
சந்தேகநபர்களின் பிணை மனுக்கள் தொடர்பில் பரிசீலித்த நீதிபதி, பிணை வழங்குவது குறித்த தனது உத்தரவை ஆகஸ்ட் 20 அன்று அறிவிப்பதாக உத்தரவிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சிஐடி காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது எனவும், எனினும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மஹர சிறைச்சாலை கலவரத்தை வழிநடத்திய பின்னணியில் 4 கைதிகள் - ஆய்விற்காக களமிறங்கும் முக்கிய அதிகாரிகள்