இலங்கையில் நெருக்கடியிலும் மனிதாபிமானம்! வெளிநாட்டவருக்கு வியப்பை ஏற்படுத்திய இளைஞர்கள்
இலங்கையில் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கு மத்தியிலும் சிலரின் மனிதாபிமான செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவருக்கு இலங்கையர்கள் வெளிப்படுத்திய அக்கறை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
எரிபொருள் நிலையத்தில் மனிதாபிமானம்
மனம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த ரஷ்ய பிரஜை ஒருவரை வரிசையில் நிற்க விடாமல் உடனடியாக அவருக்கு தேவையான எரிபொருள் பெற்றுக் கொடுப்பதற்கு இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ரஷ்ய பிரஜையின் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் இல்லாமல் வீதியில் நின்ற நிலையில் அவருக்கு போத்தல் ஒன்றில் எரிபொருள் பெற்றுக் கொடுப்பதற்கு குறித்த இளைஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
13 நாட்களுக்குப் பின்னர் 21 ஆம் திகதி மனம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 6,600 லீற்றர் பெற்றோல் கிடைத்துள்ளது. அதனை பெற்றுக் கொள்வதற்கு பல நாட்களாக மக்கள் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்தனர்.
நெகிழ்ச்சியில் ரஷ்ய பிரஜை
எனினும் வெளிநாட்டவரை காத்திருக்க வேண்டாம் என அங்கிருந்தவர்கள் நடந்துக் கொண்ட விதம் தொடர்பில் ரஷ்ய பிரஜை மகிழ்ச்சியடைந்துள்ளார். இதன் போது தனது மோட்டார் சைக்கியில் நின்ற இடத்திற்கு செல்ல சாரதி ஒருவர் உதவியுள்ளார்.
இதன் போது குறித்த ரஷ்ய நாட்டவர் பணம் கொடுப்பதற்கு முயற்சித்த போதிலும் அதனை பெற்றுக் கொள்ளாமல் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களாக நீண்ட வரிசையில் இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.