இன்னும் 4 மாதங்களில் அதிரடியாக மாறும் அரசியல் களம்..! நவீன் திஸாநாயக்க திட்டவட்டம்
நாடாளுமன்றத்துக்குள் தற்போதைய எதிர்க்கட்சி போதியளவு பலமாகச் செயற்படாததால், அதற்கு வெளியே புதிய மக்கள் சக்தியைத் திரட்டவுள்ளோம். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தகுந்த வியூகங்களுடன் தற்போதைய அரசியல் களம் அதிரடியாக மாற்றியமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(03.06.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மாற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்துக்குள் தற்போதைய எதிர்க்கட்சியானது போதியளவு பலமாகச் செயற்படவில்லை. இதனால்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இதற்கமைய, நாடாளுமன்றத்துக்கு வெளியே பரந்தளவிலான மக்கள் சக்தியைத் திரட்டும் காத்திரமான பணிகளை நாம் மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம். அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத்துக்கும் மாகாண சபைகளுக்கும் எத்தகைய பிரதிநிதிகள் வர வேண்டும் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

அதனைத் தீர்மானிக்கும் இறுதி உரிமையை மக்களிடமே விட்டுவிட வேண்டும். குறிப்பாக, நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
அரசு நாடாளுமன்றத்தில் வெவ்வேறு சட்டமூலங்களை முன்வைத்து, தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றது. மாகாண சபை என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும்.
தற்போதைய ஆளுங்கட்சியினர் அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது, அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில்லை என்று நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டினர்.
திரைமறைவில் தீவிரமாக செயற்படும் எதிர்க்கட்சி
எனவே, இன்று அவர்கள் மக்களுக்கு வழங்கிய ஜனநாயக வாக்குறுதிகளை நிறைவேற்றி, உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால், நான் மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கி நிச்சயம் வெற்றிபெற்றுக் காட்டுவேன்.

தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகள் சிதறிப்போயுள்ளதாகக் கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் தகுந்த அரசியல் வியூகங்களுடன் களம் இறங்கத் தயாராகி வருகின்றோம்.
இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் பொறுத்திருந்து பார்த்தால், இந்த நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களம் எவ்வாறு மாறுகின்றது என்பதை அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்கான சரியான அடித்தளத்தை அமைக்கும் பணிகளில் தற்போதைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் திரைமறைவில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்றார்.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan