துரிதப்படுத்தப்பட வேண்டிய மீட்பு பணி.. சர்வதேச உதவிகளை அணுகுமாறு ஹக்கீம் கோரிக்கை
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டில் நிரந்தரமான முடிவு வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகையொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் துயர நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க உட்பட அனைவரையும் ஒரு மேசைக்கு அழைத்து, சர்வதேசத்திற்கு ஒரு தேசிய வேண்டுகோளை விடுக்க வேண்டும். அதன் பின்னர் பிரதமர் மோடி, ஜப்பானியப் பிரதமர் போன்றோரை வைத்து ஒரு சபையாக அமைத்து, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டில் ஒரு 'நீட்ஸ் அசெஸ்மென்ட்' செய்து, அவசர, இடைக்கால மற்றும் நீண்டகால உதவிகள் குறித்த பட்டியலைத் தயாரித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.

மக்கள் தற்போது முழுமையாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள். மக்கள் துப்புரவுப் பணிக்காக மட்டுமே மீளத்திரும்பியுள்ளனரே தவிர, அங்கு நிரந்தரமாகக் குடியேற முடியாத நிலைமையே உள்ளது. துப்புரவு மற்றும் சுகாதாரப் பிரச்சினை முக்கியமானது.
வீடுகளைத் துப்புரவு செய்தல் மற்றும் வியாபார நிறுவனங்களை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வருதல் ஆகியவை ஒருபுறம் இருக்கையில், வீதியோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, அந்தப் பிரதேசங்கள் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது அவசியம்.
குப்பைகளை அகற்றி, வீதிகளைச் சுத்தப்படுத்தி, போக்குவரத்தை சீர்படுத்துவதே இப்போது அவசியம். அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஆளணி பற்றாக்குறை மிக முக்கிய பிரச்சினை. கிராம மட்டத்தில் ஆளணியில் வெற்றிடங்கள் உள்ளன. அனர்த்த மத்திய நிலையத்திலும் (NPR) நிறுவனத்திலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

உள்ளூராட்சி சபைகளில், பயன்படாமல் இருக்கும் கனரக வாகனங்களை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறான அனர்த்தங்களின்போது, எல்லாவற்றுக்கும் சில சட்டங்களை அழுத்தப்படுத்தாமல், மனிதாபிமானத்துடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் அணுகி, நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
நிவாரண பணிகளின் தீவிரம்
அனர்த்த நிவாரணப் பணிகளில் அரசியல் செய்வதை நான் சற்றும் விரும்பவில்லை. இந்த அனர்த்தம் ஒரு தேசியப் பிரச்சினை, இதில் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை. எதிர்க்கட்சித் தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. நாங்கள் வெளிப்படையாக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.
உதாரணமாக, அரசாங்கம் உள்நாட்டில் நிதி திரட்ட கொண்டுவந்த குறைநிரப்புப் பிரேரணைக்கு (supplementary estimate) உடனடியாக ஆதரவு தருவதாகச் சொன்னோம். அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் வந்து எங்களுடன் ஒத்துழைக்கிறார்கள். எனவே, எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நாங்கள் வழங்குகிறோம்.

ஆனபோதிலும், சாதாரண மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது சில விமர்சனங்கள் வரும். இந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அரச தலைமைகளுக்கு வர வேண்டும். அரசியல் விமர்சனங்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தேசிய சபை அமைப்பது குறித்த தவறான புரிதல் உள்ளது. நான் வலியுறுத்தியது, அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலைமையைப் பிரகடனப்படுத்துதல் என்பதே. இது அவசர திருத்தங்களைச் செய்வதற்கும், சட்டத்துக்குப் புறம்பாகச் செய்யக்கூடிய விடயங்களுக்கு ஓர் அதிகாரத்தை அரசாங்கத்திற்குத் தற்காலிகமாக வழங்குவதற்கும் உதவும். இது அவசரமாகச் செய்யப்பட வேண்டிய சட்டரீதியான கடமை.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் (IMF) கடன் மீளச்செலுத்துவதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிற்போடுமாறு ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam