பாதுகாப்பு படையினரின் பெயரை பயன்படுத்தி நூதனமாக பண மோசடி
மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழியாக தெரிவித்துஅவர்களிடம் இருந்து நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகம் உட்பட 4 கடைகளிலும் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 2 கடைகள் உட்பட 6 கடைகள் தமது கடைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தொலைபேசி இலக்கத்துடன் விளம்பரப்படுத்தியுள்ளனர்.
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு
இந்த நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜூஸ் கடை ஒன்றின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தான் விசேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாம் உயர் அதிகாரி என போலியாக தெரிவித்து முகாமில் 60 பேருக்கு 5 நாள் பயிற்சி இடம் பெறுகின்றது.
அவர்களுக்கு குடிப்பதற்கு ஜூஸ் தேவை என ஓடர் செய்து அதனை முகாமிற்கு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் குறித்த ஜூஸ் கடையுடன் மீண்டும் தொடர்பு கொண்டு கேக் இருக்கிறதா என வினவியபோது கடை உரிமையாளர் இல்லை என்றுள்ளார்
மீண்டும் சிறிது நேரத்தின் பின்னர் தொடர்பு கொண்டு ஒரு அம்மாவிடம் கேக் ஓடர் செய்துள்ளேன். அவரிடம் றிசீட் இல்லை (பில்) அந்த தொகையை உங்கள் ஜூஸ் றிசீட்டுடன் சேர்த்து கொண்டு வரவும் என தெரிவித்துள்ளார்.
அதற்கு கடை உரிமையாளர் சம்மதம் தெரிவித்து விட்டு அவர் கேட்ட ஓடரை வழங்க தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் போலி படை அதிகாரி தொடர்பு கொண்டு அந்த கேக் ஓடர் செய்த அம்மாவிற்கு அதற்கான பணம் 9 ஆயிரத்து 800 ரூபா வழங்க வேண்டும். எனவே அந்த பணத்தை அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டு வரவும் அந்த பணத்தை சேர்த்து தருகிறேன் என்றுள்ளார்.
போலி நபர் அனுப்பிய வங்கி கணக்கு
இதையடுத்து போலி நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 9 ஆயிரத்து 800 ரூபாவை அனுப்பிவிட்டு ஓடர் செய்த ஜூஸ் பானத்தை எடுத்து கொண்டு குறித்த நபர் தெரிவித்த வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்று பார்த்தபோது அங்கு படை முகாம் இல்லை என அறிந்துகொண்டுள்ளார்.

இதன்போது குறித்த நபருடன் தொடர்பு கொண்டபோது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நகரில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் 21 ஆயிரம் ரூபாவும் ஒரு கடை உரிமையாளரிடம் இருந்து தலா 9 ஆயிரத்து 800 ரூபா வீதம் 3 கடைகளில் பணத்தை போலி விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் என தெரிவித்து நூதனமான முறையில் பண மோசடி செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணத்தை இழந்த கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.