இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் மோடி வரும் போது கையெழுத்தாகும்..!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இலங்கைகு வருகை தரும் போது இந்தியாவும் இலங்கையும் முதல் முறையாக ஒரு பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன என்று புதுடில்லியில் செய்திகள் வெளியாகியுளன.
கொழும்பு மீது சீனா தனது இராணுவ செல்வாக்கை அதிகரிக்க இடைவிடாத முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகையில் அதற்கு மத்தியில் கொழும்பு - புதுடில்லி பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியாகியிருக்கின்றது.
ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இலங்கையின் கடனை மறுசீரமைப்பது உள்ளிட்ட பல இருதரப்பு ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் உறுதிப்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அதில் முக்கியமான ஒன்றே இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று கூறப்படுகின்றது. இதனை புதுடில்லியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோடிட்டு காட்டினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் அவர். இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா - இலங்கை பாதுகாப்பில் ஒரு பெரிய முன்னேற்றப் பாதையை அது குறிக்கும்.
இது, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை நாட்டிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை இந்தியா வெளியேற்றியமை தொடர்பான கசப்பான பாதுகாப்பு அத்தியாயத்தை இரு பக்க பரஸ்பர புரிந்துணர்வோடு மாற்றி எழுத வாய்ப்பளிக்கும் என இந்திய நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்மொழியப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த விரிவான விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை, ஆனால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் பின்னணியில் இரு தரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளை இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |