இ.தொ.காவின் உடன்படிக்கைக்கு இணக்கம் வெளியிட்ட மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம்
மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 16 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கைக்கு மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவிப்பதாக குறித்த கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலிய பெருந்தோட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்ததை அடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலைநிறுத்த போராட்டத்தை மீளப் பெற்றதோடு, தொழிற்சாலையில் இருந்து தேயிலையை அனுப்ப அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
நவீன அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு
இதேவேளை மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறி வருகின்றமை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான கம்பனிகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் அம்பட்டிக்கந்த தோட்ட தொழிற்சாலையில் உள்ள இ.தொ.கா உறுப்பினர்களுடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் தொழில் சட்டத்தை தொடர்ந்து மீறுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட அவர் தொழிலாளர்கள் மீதான நவீன அடிமைத்தனத்துக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், தொழிலாளர்களின் உரிமைகள் மீட்கப்பட்டு, நிர்வாகத்தின் அணுகுமுறை மாறும் வரை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலை, தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றுவது நிறுத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

