ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும்
இப்போது புதிய அரசியல் யாப்பும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வும் பற்றி பரவலாக பேசப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு இப்போ வந்து விடும் என்றும் ஒரு மாயையை தோற்றுவிக்கிறார்கள். நடக்க முடியாத இல்லாத ஒன்றிற்காக விலாவாரியாக பேசுகின்றார்கள்.
அத்தோடு தமது முன்மொழிவுகளை முன்வைக்கப் போவதாக வீரதீரக் கதைகள் பேசுகிறார்கள். இலங்கை அரசியலில் பௌத்த சிங்கள அரசு இவர்களுடைய முன்மொழிவை கேட்கத்தான் போகிறதா? அல்லது அது ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்குமா? புதிய அரசியல் யாப்பை உருவாக்குவார்களா? என்ற மூன்று வினாக்கள் எழுகின்றன.
இப்போது அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்றிருப்பதால் புதிய யாப்பு ஒன்று கால தாமதாமாக சிலவேளை வரக்கூடும். அது ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஒருபோதும் முன் வைக்கப் போவதில்லை என்பது மாத்திரமல்ல கடந்த காலத்தில் இருந்த யாப்புக்களைவிட தமிழ் மக்களை மேலும் ஒடுக்கக் கூடிய வகையிலான ஒரு யாப்பாகவே உருவாக்கப்படும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.
அரசியல் தீர்வு
புதிய யாப்பை சமஸ்டி யாப்பாக மாற்ற வேண்டும் என்றும் அதற்காக சமஸ்டி தொடர்பான ஆய்வுகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் தமிழரசு கட்சி இன்னொரு விதமாக எக்கைய ராஜ்யத்திற்குள் அதிகாரப் பகிர்வு என்று கதை அளக்கிறார்கள்.
அதே நேரத்தில் புலம்பெயர் உதிரிகளினால் உருவாக்கப்பட்ட ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று என்று அழைக்கப்படும் சிவில் சமுகம் சார்ந்தவர்களால் திருமலை பிரகடனம் என்ற 20 பக்கம் கொண்ட ஒரு பிரகடனத்தை வெளியிட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் Referendum (கருத்துக்கணிப்பு வாக்கடுப்பு) நடத்த வேண்டும் என கோரி நிற்கிறது.

இன்னும் ஒரு தரப்பு 13ஆம் திருத்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்தும்படி வேண்டுகிறார்கள். வேறு சில குழுக்கள் மேலே குறிப்பிட்ட கருத்துக்களை எதிர்ப்பவர்களாகவும் அதேநேரம் தமிழ் தேசியம் பேசுவர்களாகவும் உள்ளனர். இங்கே தமிழ் தேசியம் என்ற ஒன்று இவர்கள் யாரிடமும் இல்லை என்பதே தத்துவார்த்த உண்மையாகும்.
தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்கள் ஏதோ ஒரு கொள்கையில் உள்ளார்ந்த மனஉணர்வோடு நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம், அந்தக் கொள்கைக்காக ஒருமித்த கருத்தோடும் ஒருமித்து செயற்படவும் தயாராக இருக்கிறோம், செயற்படுகிறோம் என்பதே தமிழ் தேசியம் ஆகும்.
இங்கே தமிழ அரசியல் பரப்பில் உள்ளோர் பல்வேறுபட்ட கொள்கைகளிலும், பல்வேறுபட்ட கருத்துக்களிலும், பல்வேறுபட்ட செயற்பாடுகளிலும், எதிரும் புதிருமாக செயற்பட்டு கொண்டு நாம் தமிழ்த் தேசிய தளத்தில் நிற்கிறோம் என்பது பைத்தியக்காரத்தனம்.
சரியோ, பிழையோ. தவறோ. நல்லதோ, கெட்டதோ தமிழ் பேசும் மக்களின் நோக்க நிலையில் அது எமக்குச் சரி என்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற நம்புகின்ற கோட்பாடாகவே தமிழ்த்தேசியம் அமைய வேண்டும். அவ்வாறு இல்லாமல் பல்வேறு வகையில் பிளவுபட்டு, சிதறுண்டு, சீரழிந்து கிடப்பதற்கான காரணம் நம்மிடம் தலைமைத்துவம் இல்லை.
அந்தத் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பாமல் தமிழ்த் தேசியத்தை மீள்கட்டுமானம் செய்ய முடியாது. ஈழத் தமிழர்களும் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவ இடைவெளியை ஒரு நபரை இட்டு நிரப்பிட முடியாது. அவ்வாறு ஒரு தனிநபரை இட்டு நிரப்புவதற்கான நபர்களையும் தமிழ அரசியல் பரப்பில் இன்று காணமுடியவில்லை.
ஆகவே ஒரு கூட்டுத் தலைமைத்துவமே இன்றைய சூழலில் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கு பொருத்தமானது. ஒரு கூட்டி தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமானால் கட்டமைப்பு ரீதியான தமிழ் மக்களின் அரசியலை வழி நடத்துவதற்கான அனைத்து தரப்புகளையும் உள்வாங்கிய ஒரு தமிழ் தேசிய சபை ஒன்றை உருவாக்க வேண்டும்.
அந்த சபையே கூட்டுப் பொறுப்புடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியும், தேசிய கட்டுமானங்களுக்கான நடவடிக்கைகளையும் வழி நடத்தக் கூடியதாக கட்டமைப்பு செய்வது ஒன்றே இப்போது தமிழ் மக்களுக்கான தலைமைத்துவமாக அமையும்.
இனப்பிரச்சினை
ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுக்குள்ளோ, அல்லது இலங்கை பாராளுமன்றத்துக்குள்ளோ தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு பிரச்சனை அல்ல. ஈழத்தமிழர் தேசிய இனபிரச்சனை என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். ஆகவே அதனை ஒரு சர்வதேச தலையிட்டுனூடாகவே தீர்க்க முடியும்.
இந்த அடிப்படையில் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள அனைவருடைய கருத்துக்களை பற்றியும், முன்மொழிவுகள், அரசியல் வேலை திட்டங்கள் பற்றியும் சற்று பார்த்து விடுவோம்.

இந்தியாவின் அனுசரணையுடன் திம்பு பேச்சுவார்த்தைக்கு போய் தோல்வி கண்ட வரலாற்றில் இருந்தும், நோர்வே அரசின் அனுசரணையுடனான ரணில்-பிரபா சமாதான பேச்சுக்கள் டோக்கியோவில் இருந்து டப்பிலின் வரை பயணித்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் தோல்விகளிலிருந்தும் நாம் பாடங்களை கற்றுக் கொண்டு, அவற்றின் ஊடாகவே நிகழ்கால அரசியலை நோக்குவது அவசியமானது.
அந்த அடிப்படையில்தான் இப்போது சுவிஸ் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சமஸ்டி தீர்வு பற்றி பேசப்படுகிறது. பொதுவாக உலகளாவிய சமாதான முன்னெடுப்புக்களில் நோர்வே, சுவிஸ்லாந்து, கட்டார் ஆகிய நாடுகள் ஈடுபடுவதனை சர்வதேச அரசியல் விவரங்களை நோக்குவர்களுக்கு புரியும்.
இவர்களுடைய சமாதான முன்னெடுப்புகள் என்பது மேற்குலகின் பலம்வாய்ந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரல் என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் யாருடைய நிகழ்ச்சி நிரல்லாக இருந்தாலும் அது தமிழினத்துக்கு நலன் பயக்க வல்லதாயின் அதனை அரைவழி நண்பனாக(Halfway frien) பற்றிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.
மாறாக நலன் பயக்கவில்லையாயின் அதனை உதறித் தள்ளிடவும் தயங்க கூடாது. இப்போது சுவிஸ் சமஸ்டி முறைமை பற்றி பேசப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி முறைமை மிகவும் தனித்துவமானது. இதில் 26 கென்டன்களும்(மாநிலங்கள்) கணிசமான அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக முறைமை என்பது உண்மை தான்.
அதிகாரம் மூன்று நிலைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, 26 கென்டன்கள், மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் (கம்யூன்கள்) அதிகாரங்களை பங்கு போட்டுக் கொண்டுள்ளன. இங்கு அதிகாரம் மட்டுமே கருத்திக்கொள்ளப்படுகின்றது. இன, மத, வாழ்விடத்தாயகம் என்பவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
சுவிஸ் அரசியல் கட்டமைப்பு என்பது "துணைமைக் கொள்கை"(subsidiarity principle) அடிப்படையில் இயங்குகிறது. கூடிய அதிகாரம் உள்ளூர் நிர்வாகங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதும் உள்ளூர் நிர்வாகத்தால் செய்ய முடியாத பணிகள் மட்டுமே மேல்நிலை அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பு
1848ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டாட்சி அரசியலமைப்பே இந்த முறைமைக்கு அடித்தளமாகும். ஒவ்வொரு கென்டனும் ஒரு "இறையாண்மை கொண்ட குடியரசு" (sovereign republic) போன்று செயல்படுகிறது. ஒரு கென்டனின் இறையாண்மை என்பது, மத்திய அரசியலமைப்பால் வரையறுத்து கட்டுப்டுத்தப்படாத வகையில், முழுமையானதாகக் கருதப்படுகிறது.
மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படாத அனைத்து அதிகாரங்களும் கென்டன்களிடமே உள்ளன. கல்வி, சுகாதாரம், வரி விதிப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் காவல், பண்பாடு மற்றும் மொழி ஆகியமுக்கிய துறைகளில் கென்டன்களுக்கு விரிவான அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில் சுவிஸ்லாந்தின் 26 கென்டன்களும் மொழி அடிப்படையில் அமைக்கப்படவில்லை.

அங்கு 19 கென்டன்கள் ஒரு மொழியை பேசும் மக்களை அதிகம் கொண்டுள்ளன. 14 கென்டன்கள் ஜெர்மன் மொழியையும், 4 கென்டன்கள் பிரெஞ்சு மொழியையும், 1 கென்டன் இத்தாலிய மொழியை அலுவலக மொழிகளாகக் கொண்டுள்ளன. 3 கென்டன்கள் (பெர்ன், பிரீபூர்க், வாலாய்ஸ்) ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளை அலுவலக மொழிகளாகக் கொண்டவை.
கிரவுபுண்டென் (Graubünden) கென்டன் மட்டும் ஜெர்மன், இத்தாலியன், ரோமான்ஷ் ஆகிய மூன்று மொழிகளையும் அலுவலக மொழிகளாக கொண்டுள்ளது. இனம், மொழி வழிரீதியாக இந்த கென்டன்கள் புவியியல் தொடர்ச்சி அற்றவை.
ஒவ்வொரு மொழியினரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி மலை இடுக்குகளிலும், மறுபுறத்திலும் சிதறி வாழ்கின்றனர். ஆதலால் சுவிஸ்லாந்தில் வாழும் மக்கள் மொழி ரீதியாக மொழிவழித்தாயகம் என்பது எந்த மொழியினருக்கும் அங்கு கிடையாது.
ஆகவே சுவிஸ் ஆட்சி முறைமையில் குறித்த மொழி பேசும் மக்களுக்கான தாயகம் என்ற கோட்பாடு அங்கு இல்லை என்பதனால் அவர்கள் அதிகாரத்தை மட்டுமே கோரி நிற்கிறார்கள் அல்லது அனுபவிக்கிறார்கள்.
ஆனால் ஈழத் தமிழர்கள் தமது தொடர்ச்சி குன்றாத வாழ்விட தாயக நிலப்பரப்பில் ஏற்கனவே தம்மிடம் இருந்த குடியேற்றவாதத்தால் பறிக்கப்பட்ட தமக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமக்கான அதிகார அலகையே வேண்டி நிற்கிறார்கள். சுவிஸ் சமஸ்டி முறை அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வு திட்டத்தை முன்வைப்பது மிகப்பாதகமானது.
சுவிசில் உள்ள பல்லின மக்கள் தொடர்ச்சி குன்றாத ஒரு தாயகத்தைக் கொண்டவர்கள் அல்ல. ஆனால் ஈழத் தமிழர்கள் வட-கிழக்கை தமது பூர்வீக தாயமாக கொண்டவர்கள் என்ற அடிப்படையில் சுவிஸ் நடைமுறை ஈழத் தமிழர்களின் தாயக கோட்பாட்டை நிராகரிப்பதாகும்.
தாயக கோட்பாடு
தாயக கோட்பாடு நிராகரிக்கப்படுகின்ற பட்சத்தில் ஈழத் தமிழரை ஒரு தேசிய இனம் என்று அங்கீகரிப்பதனை மறுப்பதாகவும், மறுதலிப்பதாகவும் அமையும். ஆகவே சுவிஸ் மக்கள் தேசிய இனம், தாயக நிலம் என்ற அடிப்படைகள் இல்லாதவர்கள். ஆதலால் சுவிஸ் சமஸ்டி முறைமை அவர்களுக்கு பொருத்தமானது.
அது ஈழத் தமிழருடைய அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமற்றது. தாயகம், தேசியம் இல்லையேல் அந்த மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என்றே பொருள்படும். அது ஈழத் தமிழருடைய சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகவும், மறுதலிப்பதாகவும் அமைந்துவிடும். இத்தகைய சுவிஸ் சமஸ்டி முறைமை என்பது டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் மாவட்ட சபைக்கு ஒப்பானது என்பதே உண்மையாகும்.
சுவிஸ் சமஸ்டி ஆட்சி முறையை பரிசீலிப்பது என்பதுவே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசையை குழிதோண்டி புதைப்பதாக அமைந்துவிடும். அத்தோடு மேற்குலக அரசியல் சிந்தனை முறையும், ஜனநாயக விழுமியங்களும், மேற்குலகப் பண்பாடும், சுவிஸ்லாந்து மக்கள் ஜனநாயக முறைமைக்கு பழக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சுவிஸ் சமஸ்டி முறைமை அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறது.
ஆனால் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை கலாச்சாரத்தைக் கொண்ட, அதனடிப்படையில் கட்டமைப்புச் செய்யப்பட்ட சிங்கள பௌத்தமத அமைப்புகளும், அதன் நிறுவனங்களும், சிங்கள ஊடகங்களும், சிங்கள புத்திகீவிகளும், இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி கட்டி வளர்க்கின்ற இலங்கை இனவாத அரசும் மேற்படி ஜனநாயக முறைமையை பின்பற்றுவார்கள் என்றோ, அவற்றை கடைப்பிடிப்பார்கள் என்றோ அணுவளவும் கற்பனை செய்யக்கூடாது.
இதனை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டமும், அதனுடான மாகாண சபை தீர்வு திட்டமும் எவ்வாறு சிங்கள பௌத்த அரசால் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்காமல் தடுத்து நிறுத்தி பயனற்றதாக செய்தார்கள் என்பதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து "எக்கைய ராஜ்ஜியம்" எனப்படும் ஒற்றை ஆட்சிக்குள் சமஸ்டி என்ற சொல்லாடலே வெறும் கற்பனையானது. ஒற்றை ஆட்சிக்குள் சமஸ்தி எப்படி இருக்கும் என்பதற்கான அரசியல் தத்துவார்த்த விளக்கத்தை தமிழரசு கட்சி பகிரங்கமாக வெளியிட வேண்டும். அரசியல் விஞ்ஞானத்தில் இப்படியான ஒரு சொல்லாடல் இல்லை. அவ்வாறு நடைமுறைப்படுத்தவும் முடியாது என்பதுவே உண்மையாகும்.
இது அவர்களின் இலங்கைச் சமஸ்டி கட்சி என்பதற்கு இலங்கை தமிழரசு கட்சி என்று பெயர் வைத்தது போன்ற செயலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே முயல் கொம்பிற்கு வியாக்கியானம் செய்ய விருப்பமின்மையினால் அதனைக் கடந்து செல்கிறேன்.
கடந்த வாரம் ஈழத் தமிழ் சிவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் திருமலை பிரகடனம் என்ற ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தப் பிரகடனத்தின் சாராம்சத்தில் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென கோரி இருக்கின்றனர்.
நாட்டின் இறையாண்மை
தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை வேண்டி மேற்கொள்ளப்படும் வாக்கெடுப்பை Referendum என்று அழைக்க முடியாது. அரசியல் தத்துவார்த்தத்தில் அவ்வாறு அழைப்பதே மிகத் தவறான பொருளைத் தருவதாக அமையும்.
Referendum என்பது பொதுவாக ஒரு சட்டம், அரசியல் சட்ட திருத்தம், அல்லது கொள்கை மாற்றம் தொடர்பான விடயங்களில் மக்களிடம் நேரடியாக முடிவை கேட்டு மக்களின் ஒப்புதலை பெற நாடுதழுவியரீதியில் நடத்தப்படுவது.
இது சட்டரீதியாக கட்டாயமான முடிவாக இருக்கும். அந்த வாக்கெடுப்பிற்கு மக்கள் “ஆம் அல்லது இல்லை” என்று வாக்களித்தால் அதற்கமைய மக்களின் விருப்பை அரசு பின்பற்றும்.
இலங்கையில் இத்தகைய ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு 1982 இலங்கை பாராளுமன்ற உறுப்பினரின் காலத்தை நீடிப்பு செய்வதற்கான கருத்துக் கணிப்பு வாக்கடுப்பு (1982 Sri Lankan parliamentary term extension referendum) 22 -12-1982ல் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1983ல் நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை நடத்தாமல் பாராளுமன்றத்தின் காலாவதியான காலத்தை மேலும் 6 ஆண்டுகள் நீட்டிக்க மக்களிடம் ஒப்புதல் பெற 1982ல் வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்று 1989 வரை பாராளுமன்ற காலத்தை நீட்டினார்.
அது இறைமை கொண்ட நாட்டின் சட்ட வரையறைக்குள் நடத்தப்பட்டது. Referendum நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடத்தப்படுவது என்பதுவே உண்மையாகும்.
அப்படியானால் பிரிந்து செல்லும் தேசிய இனங்களுக்கு மத்தியில் அவர்களுடைய அரசியல் விருப்பை கேட்டறிவதற்கான அல்லது வெளிப்படுத்துவதற்கான வாக்கெடுப்பை எவ்வாறு அழைப்பது என்ற கேள்வி எழும் அதனை “ஒப்பங்கோடல்“ என்றும் ஆங்கிலத்தில் “Plebiscite“ என்று அரசியல் விஞ்ஞானத்தில் அழைக்கப்படுகிறது.
பொதுவாக அரசியல் அல்லது பிரதேச தொடர்பான முக்கிய தீர்மானங்கள் உதாரணமாக ஒரு பிரதேசம் எந்த நாட்டுடன் சேரவேண்டும் என்பது குறித்து அந்தப் பிரதேச மக்களின் கருத்தை அறிய மேற்கொள்ளப்படும் வாக்கெடுப்பு ஒப்பங்கோடல் என அழைக்கப்படும். இது சர்வதேச அல்லது பிராந்திய அரசியல் சூழ்நிலைகளில் அல்லது வல்லமை வாய்ந்த நாடுகளின் உலகம் தழுவிய அரசியல் நலங்களுக்காக தேசிய இனங்களின் விடுதலை என்ற போர்வையில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் மக்கள்
ஈழத்தமிழர்கள் இலங்கை அரசுடன் ஒரு கூட்டாட்சிக்கு போவதா? அல்லது பிரிந்து சுய நிர்ணய அடிப்படையில் தம்மைத் தாமே வட'கிழக்கு தாயகத்தில் ஆள்வதா? என்பதற்கான ஒப்பங்கோடல் எனப்படும் கருத்தறியும் வாக்கெடுப்பு இலங்கையின் இறையாண்மையை மீறியதாகவும், அதன் சட்டத்துக்கு புறம்பானதாகவும் அமைவதனால் தமிழ் மக்களிடம் அவ்வாறான ஒரு ஒப்பங்கோடல் (Plebiscite) வாக்கெடுப்பை ஒருபோதும் நடத்த முடியாது.
அத்தகைய வாக்கெடுப்பை இன்றைய சூழலில் நடத்த முடியுமா என்ற கேள்வியாக எழுகிறது. ஒப்பங்கோடல் (Plebiscite) வாக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழர் தாயகம் தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் அவ்வாறு நடத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அவ்வாறு இல்லையெனில் நடத்த முடியாது. அதற்கு உதாரணம் சோமாலிலாண்ட் நிலப் பிரதேசம் சோமாலிலாண்ட் நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் அவர்களினால் ஒரு ஒப்பங்கோடல் (Plebiscite) வாக்கெடுப்பை நடத்தினார்கள்.
அவர்களுடைய தாயகம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் தங்களுடைய ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை தனிநாடாக கருதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பை ஒப்பங்கோடல் என்றும் அழைக்கலாம்.
அதனை கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (Referendum) என்ற நிலையிலும் எடுத்துக் கொள்ள முடியும். அவ்வாறே தென்சூடானிலும் நடத்தப்பட்டதை ஒப்பங்கோடல் (Plebiscite) என்றும் அதேநேரம் Referendum என்றும் அழைக்கலாம்.
அது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள தாயக நிலப்பரப்பு முழுவதிலும் வெளிசக்திகளின் ஆதரவுடனும் அழுத்தத்தினாலும் நடந்தமைனால் அவ்வாறு இரண்டு பொருளையும் கொண்டதாக அமையும்.
ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் எமது கட்டுப்பாட்டில் ஒரு துண்டு நிலமும் இல்லாமல் இருப்பதனால் Plebiscite ஒன்றையே நடத்த முடியாது.
இன விடுதலை
உலகளாவிய தேசிய இன விடுதலை மேற்கொள்ளப்பட்ட Referendum அல்லது Plebiscite எனப்படும் மக்களின் அரசியல் விருப்பை வெளிப்படுத்துவது தொடர்பான கருத்தறிதல் வாக்கெடுப்பு என்பது மேற்குலக அனுசரணையுடனோ, அல்லது மேற்குலகத்தின் நிர்பந்தத்திற்கு ஊடாகவோ, அல்லது வல்லரசுகளின் பல பிரயோகத்தின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட்டதை கடந்தகால வரலாறு நிரூபித்துள்ளது.
ஆகவே ஈழத் தமிழர்கள் இலங்கையின் அரசியலமைப்புக்குள்ளே அல்லது இலங்கை நாடாளுமன்றத்துக்குள்ளோ எந்தத் தீர்வையும் பெற்றுவிட முடியாது.
தமிழ் மக்கள் தம்மை தேசமாக உருத்திரட்டி, தேசமாக சிந்தித்து, அரசாங்கத் தொழில் பட்டால் மாத்திரமே விடுதலைக்கான பாதையில் முன்னேற முடியும். இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானது அனைத்து வகையிலும் ஐக்கியம்.
அந்த ஐக்கியமே தேசமாக எம்மை உருத்திரட்டும். அவ்வாறு உருத்திரண்டு தேசமாக சிந்தித்தால் மட்டுமே தேசத்தை கட்டி எழுப்ப முடியும்.
இன்றைய இந்துசமுத்திர ஆதிக்க போட்டியில் அரசுகளுக்கு இடையிலான உறவை வளர்ப்பதும், அனுசரணையைப் பெறுவதற்கும் ஏற்ற ஒரு வெளியுறவு கொள்கையை வகுத்து அரசாக செயல்படுவதே ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசை அடைவதற்கான ஒரே மார்க்கமாகும்.
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan