உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போடுங்கள் : தேர்தல் ஆணைக்குழுவிடம் சஜித் வேண்டுகோள்
வரவு - செலவுத் திட்ட விவாதத்துக்குப் பின்னர் அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்தனர்.
இதன் பிற்பாடு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்துக்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது.
பிரச்சினையான சூழ்நிலை காரணமாகப் பழைய வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட்டு, புதிய வேட்புமனு கோரப்பட வேண்டும் என்று அனைவரும் முன்வந்து இதனை ஆதரித்தனர். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது வரவு - செலவுத் திட்டத்தின் மீது இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 25 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பிறகு, குழு நிலை விவாதம் நடக்கும். சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்காலப்பிரில் சட்டவாக்கப் பணிகளைச் செய்ய உறுதிபூண்டுள்ளனர். சபையில் மட்டுமன்றி பல்வேறு குழுக்களும் காணப்படுகின்றன.
இந்த வரவு - செலவுத் திட்ட காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டவாக்க நடைமுறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி, எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பல்வேறு குழுக்களும் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியும் வருகின்றன, நாடாளுமன்ற நடைமுறை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். புதிதாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர்கள் இதனைப் பெரியதொரு விடயமாகப் பார்க்காமல் இருக்கலாம், நாடாளுமன்ற நடைமுறை தெரியாவிட்டால் புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே, வரவு - செலவுத் திட்ட விவாதத்துக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
ஆளுந்தரப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவை தமது கைப்பாவையாகக் கருதுகின்றனர். தேர்தலை நடத்த வேண்டிய திகதிகள் மற்றும் வேட்புமனுக்களைக் கோரும் திகதிகளை அரசு தீர்மானிக்க முடியாது. ஆளுந்தரப்பினர் இவற்றைக் குழப்பிக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.