17 வருடங்களாகியும் நீதி கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள் - அதிகாரிகளுக்கு ஆளுநர் விசேட வேண்டுகோள்
போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம், பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற உணர்வோடு அவர்களுக்கு உதவிச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தின் “5 ஆண்டுச் செயலாற்றுகை” தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(23.06.2026) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மக்களின் முதன்மையான பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிப் போரின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்த காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. மக்களின் தனிப்பட்ட ஆவணங்களும் போரால் தொலைந்து போய்விட்டன.

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், எமது மக்கள் தமக்கான காணி உறுதிப்பத்திரங்களுக்காக இன்னமும் அலைந்து திரிகின்றார்கள்.
இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவாகத் தீர்த்து வைப்பதற்காகவே மாகாண காணி ஆணையாளர் இ.குருபரனின் எண்ணக்கருவில் இந்த விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளில் ஒன்று
இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும்.

இருப்பினும், இந்த திட்டத்தின் முன்னேற்றம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை என்பது கவலையளிக்கின்றது. இந்தக் காணிப் பிரச்சினைகளை நாம் விரைவாகத் தீர்க்காவிட்டால், மக்கள் தினமும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் எனது அலுவலகம் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பார்கள்.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் என்றார்.
நிலுவையில் 198, 751 காணி விவகாரங்கள்
இதன்போது கருத்துத் தெரிவித்த மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன், வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 198, 751 காணி தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடைவதற்காக ஆளுநரின் அனுமதியுடன் ஆளணிச் சீராக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விசேட செயற்றிட்டத்துக்கான கொடுப்பனவுகளுக்கு ஆளுநர் அனுமதியளித்தமைக்காகத் தனது நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அதிகாரிகளின் தாமதங்களால் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் சுணக்கம் காரணமாக, மாகாணத்துக்கான பெருமளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.
அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை
பின்னடைவுகளுக்கான காரணங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன், தொடர்புடைய அதிகாரிகளிடம் உரிய விளக்கங்களும் கோரப்பட்டன.
தொடர்ந்து பின்னடைவைக் காண்பிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யோசனையையும் மாகாண காணி ஆணையாளர் முன்வைத்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டத்தை மிகத் துரிதமாக முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், பிரதேச செயலாளர்கள் ஒவ்வொரு வாரமும், மாவட்டச் செயலாளர் மாதாந்தமும் இதன் முன்னேற்றங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என உறுதியான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.