கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் எடுத்த விபரீத முடிவு
குருநாகல், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அதே வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை
இந்த சம்பவம் வெல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகதெஎலபொத பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் நிகதெஎலபொத பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே தற்கொலை செய்துகொண்டவராவார்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணுக்கும் குறித்த நபருக்குமிடையே நீண்ட நேரமாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தர்க்கம் விபரீதமாக முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நபர் வீட்டிலிருந்த கூர்மையான ஆயுதமொன்றை எடுத்து அந்தப் பெண்ணைச் சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்குள்ளான அந்தப் பெண், கடுமையான வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பல கோணங்களில் தீவிர விசாரணை
பெண்ணைக் கொலை செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சம் மற்றும் விரக்தி காரணமாக, தாக்குதலை நடத்திய நபரும் அதே வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸ் நிலையத்துக்குக் கிடைக்கப்பெற்ற அவசரத் தகவலுக்கமைய, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து இரு சடலங்களையும் மீட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவ பொலிஸார் இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவம் குறித்து பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.