இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: பொலிஸார் தீவிர விசாரணை (PHOTO)
இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவர் (வயது 40) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பசாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து பிறைந்துரைச்சேனைக்கு வியாபார நோக்கில் கேரளா கஞ்சாவினை கடத்தி வந்த நிலையில் வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதையொழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் மேலும் சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளனரா என்பது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கேரள கஞ்சாவினை வரவழைத்ததாக கூறப்படும் பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த சூத்திரதாரியை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.