கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் (Video)
கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான போராட்டம் இன்றுடன் 1919 நாளை எட்டுகின்றது.
இதனையொட்டி இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்தது. இலங்கை பொருளாதாரத்தின் 15 வீத செலவீனம் இதுவாகும். இது தமிழ்மக்களின் பிரதான கோரிக்கை. மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும்.
இல்லாவிடில் கர்மா அனைவரையும் பாதிக்கும். சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளா பேசுவார்கள் இதுதான் 74 வருடத் தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றி பேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப்படுகொலைக்கான நீதியைப் பெறமுடியாது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.