நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தீர்மானம்: ஜனாதிபதியை சந்திக்கவும் முடிவு
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசு முன்மொழிந்துள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேரடியாக தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
30000 மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்பு
நாடளாவிய ரீதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபை கூட்டத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசின் தீர்மானம் தூரநோக்கற்றது என்றும், அதனை முற்றாக எதிர்ப்பது என்றும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, அரசின் இந்த யோசனை நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், நீதி அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கேள்விகளை முன்வைத்தனர்.
அவசரப்படுத்துவது ஏன்?
இது குறித்துக் கலந்தாலோசிக்க முன்னரே சந்திப்பொன்றைக் கோரியிருந்த நிலையில், அதற்கு இடமளிக்காமல் அவசரமாக இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டிய அவசியம் என்ன?
ஆலோசனையின்மை
இதுவரை காலமும் புதிய சட்டங்கள் அல்லது திருத்தங்களைக் கொண்டுவரும்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெறப்படுவது வழக்கம். ஆனால், இந்த முக்கிய விடயத்தில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?
தனிநபரை பாதுகாக்கும் நடவடிக்கையா?
ஏற்கனவே ஓய்வுபெறும் வயதை எட்டிய நீதியரசர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற்போது அவசரமாக இத்திருத்த யோசனை முன்வைக்கப்படுவதானது, குறிப்பிட்ட ஒரு நீதிபதியை மாத்திரம் இலக்குவைத்து (அல்லது பாதுகாப்பதற்காக) மேற்கொள்ளப்படுகின்றதா என்ற நியாயமான சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
அமைச்சரின் விளக்கமும் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான கோரிக்கையும்
சட்டத்தரணிகள் சங்கத்தின் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, "இந்தச் சட்டத் திருத்த யோசனை தனிப்பட்ட ஒருவருக்கானதல்ல. அனைத்து நீதிபதிகளுக்கும் பொதுவானதாகவே கொண்டுவரப்படுகின்றது.

கட்சி மற்றும் அமைச்சரவையின் தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டுப் பொறுப்புக்குக் கட்டுப்பட்டே நான் செயற்படுகின்றேன்" என்று தெரிவித்தார். மேலும், சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதற்குப் பதிலளித்த சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டைத் தாமே நேரடியாக ஜனாதிபதியிடம் விளக்க விரும்புவதாகவும், அதற்காக அவருடனான சந்திப்பொன்றுக்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
கொழும்பு பிறந்த நாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! வங்கி கணக்கிலிருந்து கைமாற்றப்பட்ட பணம் - சிக்கிய சந்தேகநபர்
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri