கோட்டாபய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம்! 840 மில்லியன் ரூபா இழப்பீடு கோரிய ஜப்பான்
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்கான இழப்பீடாக ஜப்பானிய நிறுவனத்திற்கு ஏறக்குறைய 840 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய (23.07.2026) நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டமைக்கான இழப்பீடாக ஒரே நேரத்தில் 189 மில்லியன் ஜப்பானிய யென், 1.031 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏறக்குறைய 110 மில்லியன் இலங்கை ரூபாய்கள் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இழப்பீடு தாமதிக்கப்பட்ட காலத்துக்கான கூடுதல் வட்டி
எனினும் ஜப்பானிய நிறுவனம் தற்போது குறித்த இழப்பீடு தாமதிக்கப்பட்ட காலத்துக்கான கூடுதல் வட்டியைக் கோரி வருகிறது. எனினும் கோரப்பட்ட வட்டித் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், இவ்விடயத்தை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிடல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலகு தொடருந்து திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மொத்த இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், 2024ஆம் ஆண்டில் வழங்கப்படும் இழப்பீடு குறித்த தகவல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பின் நகரப் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு இத்திட்டம் பொருத்தமற்றது என அடையாளம் கண்ட பின்னர், அப்போதைய அரசாங்கம் இத்திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தது. 2020 செப்டெம்பர் 18 அன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இத்திட்டம் செலவுத் திறனற்றது எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், அப்போதைய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்திலும், இது செலவுத் திறனற்ற திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரத்தில், இத்திட்டம் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பாக கணக்காயளர் நாயகம் ஒன்பது பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
முடிவு மறுபரிசீலனை
இத்திட்டத்தை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்து, அதை மீண்டும் தொடங்க வேண்டும் அல்லது அதன் பொருளாதாரமற்ற தன்மையை பொருளாதார ரீதியாக சாத்தியமாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், கணக்காய்வாளர் நாயகம் அதை மீண்டும் தொடங்க நேரடியாகப் பரிந்துரைக்கவில்லை. மேலும் தற்போதைய அரசாங்கமும் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்து முன்னைய முடிவுக்கு மாற்றமான முடிவு எதனையும் எடுக்கவில்லை.

கொழும்பு நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்காக, பேருந்துகள் மற்றும் பாரம்பரிய தொடருந்து சேவைகளுடன் கூடுதலாக ஒரு புதிய பொதுப் போக்குவரத்து அமைப்பின் தேவை 2010-களின் முற்பகுதியில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த இலகு தொடருந்து திட்டம் ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டது.
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், பயண நேரத்தைச் சேமித்தல் மற்றும் மேற்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
2.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட இத்திட்டத்திற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (JICA) 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. 40 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய இந்தக் கடனுக்கு, 12 ஆண்டுகள் சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தக் காலத்தில் இலங்கை எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.