ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியை தொடர வேண்டும்..! ரணில் அழைப்பு
ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியே எமது நாடு அன்று வறுமையில் இருந்து விடுபடக் காரணமாக இருந்தது எனவும், அந்தப் புரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே எமது அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று(17.9.2026) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.
17 ஆண்டுகாலப் புரட்சி
மேலும் தெரிவிக்கையில், "ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது வருட நிறைவு விழா செயற்பாடுகளில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒரு ஜனநாயகக் சோசலிசக் கட்சியாகும். சொத்துரிமை இலட்சக்கணக்கான மக்களிடையே பரவலாக்கப்படும்போது, அந்தச் சொத்துரிமை மூலமாக உருவெடுக்கும் அதிகாரமும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு நபருக்கும் ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்கும், தனது குடும்பத்தைப் பேணுவதற்கும், சட்டபூர்வமான உரிமைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அவசியமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே கட்சியின் நோக்கமாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஆர். ஜயவர்தன 17 ஆண்டுகாலப் புரட்சியொன்றை ஆரம்பித்து, அவருக்குப் பின்னர் வந்த ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றியமைத்தார்.
நீதிமன்ற அதிகாரத்தைச் செயற்படுத்தும் உரிமைகள்
1977 இல் ஆட்சியைக் கைப்பற்றும் போது 4 பில்லியனாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, வெளியேறும் போது 5 ஆயிரம் பில்லியனாக உயர்ந்தது." என்று குறிப்பிட்டார்.

மேலும், மகாவலி திட்டத்தை உருவாக்கிய காமினி திஸாநாயக்க, மகாபொல புலமைப்பரிசிலை அறிமுகப்படுத்திய லலித் அத்துலத்முதலி ஆகியோரின் முயற்சிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்த 1978 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டம் மூலமாகவே இறைமை, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பன மக்கள் இறைமைக்குள் உள்ளடக்கப்பட்டன என்றும்,126 ஆவது உறுப்புரை மூலம் அடிப்படை உரிமைகளில் நீதிமன்ற அதிகாரத்தைச் செயற்படுத்தும் புரட்சிகரமான உரிமைகள் வழங்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.