வடமராட்சி கிழக்கில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு: பிரதேச செயலர் விசனம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் நீண்ட காலமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அந்தப் பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27.09.2023) இடம்பெற்றபோது மருதங்கேணி பிரதேச செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நீண்ட காலமாகக் குறித்த பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை, நாகர்கோவில், மணற்காடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.
பொலிஸ் காவலரண் அமைக்க கோரிக்கை
இதனைத் தடுக்கக் குடத்தனை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அந்தக் கோரிக்கைக்கு அமைவாகப் பொலிஸார் செயற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர், இரவு பகலாகத் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
கூட்டங்களில் மாத்திரம் இந்த விடயம் பேசப்படுகின்றதே தவிர எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று விசனம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |