சட்டவிரோத கடற்றொழிலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்..! ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் சுட்டிக்காட்டு
மட்டக்களப்பு - பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரை உள்ள சட்டவிரோத 47 சுருக்குவலை மற்றும் டைனமட் பயன்படுத்தி மீன்பிடி கடல் வளத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(06.05.2026) ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்
சட்டவிரோத கடற்றொழிலின் தாக்கம் அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலை நம்பி மீன்பிடியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரத் தொழிலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டவிரோதமான செயற்பாடுகளாக டைனமட் அடித்து மீன் பிடிப்பது மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை பயன்படுத்தி சிலர் கடற்றொழிலில் ஈடுப்படுகிறார்கள்.
எனவே, அதனை நிறுத்துவதற்கு கடற்றொழில் நீரியல் வள உதவி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மட்டக்களப்பு- நாவற்குடா, பூநொச்சிமுனை தொடக்கம் பெரியநீலாவணை வரையும் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் சிலர் உட்பட 47 பேர் சட்டவிரோத சுருக்குவலை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

இந்த சுருக்கலை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள உதவி பணிப்பாளர் விசேட அதிரடிப்படை, கடற்படையுடன், இணைந்து இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதுடன், இந்த கடல் வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரம் கேட்டுக் கொள்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடற்றொழிலில் ஈடுப்படுவதால் கீரி மீன்பிடி வலையை வைத்து கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தின் கடற்றொழிலாளர் தொழிற் சங்கத்தின் தலைவர் நற்குணம் பத்மநாதன் ஈ.பி.டி.பி கட்சியிடம் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருவது தொடர்பாக வெளிக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஊடக மாநாட்டை நடத்தப்படுகிறது.
முற்றாக அழியும் கடற்றொழில்
இந்த கீரி மீன் பிடிக்கும் தொழிலில் சட்டவிரோதமான சுருக்கு வலைகளை பாவித்து பூநொச்சிமுனை, காத்தான்குடி, செட்டிபாளையம், தேற்றாதீவு, மாங்காடு, களுதாவளை,களுவாஞ்சிக்குடி ,கல்லாறு பெரியநீலாவணை வரை கடற்றொழிலில் ஈடுப்படுகிறார்கள்.
இவர்கள் இரவில் மீன் இறங்கி வருகின்ற மீன்களை இந்த சுருக்கு வலையால் வளைத்து ஒருவர் ஆயிரம் கிலோ கிராம் மீன்களை பிடித்து வந்து, அதனை மிகவும் குறைந்த விலையில் கிலோ 300 ரூபாய் வீதம் விற்று வருகின்றனர்.

இருந்த போதும், இங்கு பல ஆண்டுகளாக இந்த கீரி வலையை நம்பி தொழில் செய்து வருகின்ற கடற்றொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ மட்டும் பிடிபடுகிறது.
எனவே, இந்த சட்டவிரோத சுருக்குவலை தொடர்பாக எங்களுக்கு கிடைக்கும் தகவல் மாதிரி கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் மற்றும் அந்தந்த பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களுக்கும் தகவல் கிடைக்கும்.
இவ்வாறு தகவல் கிடைத்தும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்கு வலை பயன்பாட்டை நிறுத்த வேண்டும். இல்லையெனின், எதிர்காலத்தில் பிடிப்பதற்கு மீன்கள் இல்லாமல் போய் விடும் என்றார்.