யாழ். பலாலி வீதியில் உள்ள வெள்ள அபாயம் : கண்டுகொள்ளாத மக்கள்
யாழ்ப்பாணத்தின் (Jaffna) பலாலி வீதியில் வெள்ளத்தை ஏற்படுத்தவல்ல அபாயம் இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எதிர்வரும் வடகீழ் பருவபெயர்ச்சி காற்றின் மூலம் அதிக மழைவீழ்ச்சியைப் பெறும் இலங்கையின் வடபுலத்தில் வெள்ளம் தொடர்பில் கவனமெடுத்து செயற்படுதல் வேண்டும்.
ஆரிய குளத்தில் இருந்து சிராம்பியடிச் சந்தி வரையிலான வடிகாலினுள் இருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன்கள் குப்பைகளாக இருப்பதை இங்குள்ள படங்களில் காணலாம்.
ஒடுக்கமான வடிகால்களினுள் மட்டுமல்லாது அகலமான வடிகால்களினுள்ளும் அதிகளவிலான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன்கள் குப்பைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பலாலி வீதி
யாழ் நகரில் இருந்து பலாலி வீதி வழியே பயணமாகும் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் ஒடுங்கிய வடிகால்களினுள் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகளை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலை கவலைக்குரிய விடயமாகும். வெள்ள அபாயத்தினை ஏற்படுத்துவதோடு சுற்றுச் சூழலையும் மிக மோசமாகவே இவை பாதிக்கச் செய்து விடும்.
மெல்லக் கொல்லும் விசமாகவே மண்ணில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நாம் கருத வேண்டும் என விவசாயத்துறைசார் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
பிராந்திய சுகாதார பரிசோதகர்கள் மட்டுமல்லாது கிராம பொது அமைப்புகள் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்டவர்களும் இது தொடர்பில் கவனமெடுத்துச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவருவதனை யாழ் நகர வீதிகளில் உள்ள வடிகால்கள் உணர்த்துவதாக குறிப்பிடும் சமூக ஆர்வலர்களும் உண்டு.
ஒன்று சேரும் பிளாஸ்டிக் கழிவுகள்
சிறு வடிகால்களினுள் அவதானிக்க முடிந்த இத்தகைய கழிவுகளை உரிய காலத்தில் எடுத்தகற்றாது விடும் போது வெள்ளத்தோடு இவை ஒன்றாக எடுத்துச் செல்லப்பட்டு ஒடுக்கமான நீர் வடிந்தோடும் பாதைகளில் சேர்ந்து கொள்ளும்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் நீர் வழிந்தோடும் பாதை அடைபட்டு வெள்ள நீர் வழிந்தோடும் சூழல் இல்லாது போக நேரிடும்.அந்த நிலை வெள்ள அனர்த்தத்தினை யாழ் நகரில் ஏற்படுத்தி விடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்ப்பாண நகரினை சூழவுள்ள பல இடங்களிலும் அவதானிக்க முடியும் இத்தகைய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகள் பலாலி வீதியிலும் அதிகளவில் வடிகால்களினுள் அவதானிக்க முடிகின்றது.
வடிகால்கள் மட்டுமல்லாது நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள நீர் நிலையொன்றிலும் அதிகளவிலான பிளாஸ்டிக் போத்தல்கள் மிதந்திருப்தனை அண்மைக்காலங்களில் அவதானிக்கலாம். அந்த நீர் நிலை சல்வீனியா நீர்க்களையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நீர் நிலைகளிலும் வடிகால்களிலும் பிளாஸ்டிக் போத்தல்கள் அதிகளவில் சேருதல் யாழ் மண்ணின் இயற்கையான இயல்பை எதிர்காலத்தில் சிதைத்து வளமான நிலத்தை சீர்குலைத்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கவே செய்கின்றது.
பொது அமைப்புகள்
பிரதேசத்தின் பராமரிப்பும் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் செயற்படத் தூண்டப்படும் பொது அமைப்புக்களின் செயற்பாடுகளினால் வடிகால்களினுள் சேரும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகளை கிரமமான முறையில் எடுத்தகற்றும் செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படுதல் அவசியமான செயற்பாடாக சுட்டிக்காட்டப்படுவதும் நோக்கத்தக்கது.
நாளாந்தம் பயன்படுத்தப்படும் தண்ணீர்ப் போத்தல்கள் மற்றும் குளிர்பானப் போத்தல்கள் என பிளாஸ்டிக் போத்தல்கள் சூழலுக்கு வீசப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு உள் வரும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட பொருட்களின் அளவுக்கு அவற்றால் உருவாகும் கழிவுகள் அகற்றப்படுதல் தொடர்பில் கவனம் எடுக்கப்படுமளவு மிகவும் குறைவாக இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
யாழ் நகரில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஒப்பிடும் போது யாழின் புறநகர் பகுதிகளில் மற்றும் நகரிலிருந்து தூர இடங்களில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் குறைவாகவே இருக்கின்றன.
ஆகவே இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள மாநகரசபைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புக்கள் சிந்திக்க தலைப்பட வேண்டும்.
இளவயதினரிடையே சூழலுக்கு வீசப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் வடிகால்களினுள் சென்று சேர்வதனை சுட்டிக்காட்டி அவற்றை தவிர்க்கும் படியான செயற்பாடுகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை முன்னிறுத்தி செயற்றிட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
பொது அமைப்புக்களின் தலைமை நிர்வாகத்தில் இது தொடர்பில் பொருத்தமான சிந்தனைகள் உருவாகாத வரை யாழில் சேரும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகளை கிரமமான முறையில் எடுத்தகற்றும் செயற்பாடு கானல் நீராகவே அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |