எலான் மஸ்க்கின் 'டெஸ்லா' நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதித்த நீதிமன்றம்
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜோர்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.
ஒருவர் பலி
இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜோர்ஜின் தொலைபேசி காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜோர்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.
இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது.
இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்ததுடன் அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
டெஸ்லா மேல்முறையீடு
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர், நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.
இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டொலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது.
மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும். இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




