தென்னாப்பிரிக்கா -இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவில் கடும் விரிசல்
தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளும் தங்களது தூதுவர்களை பரஸ்பரமாக வெளியேற்றியுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் பணியாற்றி வந்த இஸ்ரேலிய தூதுவர் ஏரியல் செய்ட்மேன் (Ariel Seidman), நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், ஜனாதிபதி சிரில் ரமபோசாவை சமூக வலைதளங்களில் அவமதிக்கும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, அவரை 72 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு தென்னாப்பிரிக்க அரசு உத்தரவிட்டது.
கடும் விரிசல்
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலும் அங்குள்ள தென்னாப்பிரிக்கத் தூதுவர் ஷான் எட்வர்ட் பைன்வெல்ட்டை (Shaun Edward Byneveldt) 'ஏற்கத்தகாத நபர்' (Persona non grata) என அறிவித்து, வெளியேற உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா தொடுத்த இனப்படுகொலை குற்றச்சாட்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது.
தற்போது இஸ்ரேலிய தூதுவர், தென்னாப்பிரிக்க அரசின் அனுமதியின்றி உள்ளூர் தலைவர்களுடன் (மன்னர் பைலெகாஹா டலிண்டியேபோ) ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு உதவி வழங்குவதாகக் கூறி அரசியல் குறுக்கீடுகளில் ஈடுபட்டதே இந்த உடனடி மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தத் தூதுவர்கள் வெளியேற்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் சீரமைப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam