மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இந்த தவறை செய்திருக்க கூடாது! நாமல் கவலை
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஜனவரி 2013 இல் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தேன்.
நடவடிக்கை
தற்போதைய அரசாங்கம் நாம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியல்ல.
இதுபோன்ற முடிவுகளுக்கான விலையை எங்கள் கட்சி இன்னும் செலுத்தி வருகிறது.
அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைக்க நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது.''என்று நாமல் கூறியுள்ளார்.
மேலதிக செய்தி: இந்ரஜித்
