யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வேட்பாளர்கள் - சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் ஆணைக்குழு!
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வா விருது வழங்கல் நிகழ்வில் உதவி திட்டங்கள் வழங்கிய பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி நிகழ்வில் வேட்பாளர்கள் கலந்து கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டது.
உதவித்திட்ட நிகழ்வு
இதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் வருகை தந்தபோது வேட்பாளர்கள் யாரும் அவ்விடத்தில் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில், குறித்த பகுதியில் கட்சியின் கொடிகளும், வேட்பாளர்களும் இருந்ததாக முறைப்பாட்டாளரால் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, கள நிலவரங்களை ஆராய்ந்த அதிகாரிகள் இது குறித்து முறைப்பாடு ஒன்றினை வழங்குமாறும், பிரதேச சபையின் செயலாளருக்கும் இது குறித்து தெரியப்படுத்தி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதாகவும், விசாரணைகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



