மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக அழிப்பதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்று நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் விட்டு விட்டுப் பெய்யும் மழை காரணமாக டெங்கு நோய் மேலும் பரவும் அபாயம் காணப்படுவதால், ஜூன் 15 முதல் ஜூன் 20 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட விசேட நாள்
இதன் ஒரு கட்டமாக, ஜூன் 18 ஆம் திகதியான வியாழக்கிழமை பாடசாலைகள், பிரிவேனாக்கள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சுத்தப்படுத்துவதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர ஊடகங்களிடம் இன்று மேலும் தெரிவித்ததாவது,

"இலங்கையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பன பரந்த நிலப்பரப்பைக் கொண்டவை என்பதால், அங்கு டெங்கு கொசுக்கள் பெருகும் இடங்கள் அதிகமாகக் காணப்படலாம்.
டெங்கு கொசுக்கள் முட்டையிடுவதற்கு வெறும் 5 மில்லிலீற்றர் அளவிலான மிக சிறிய நீர்நிலையே போதுமானது என்பதால், இது குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இதற்கமைய, பாடசாலை அதிபர்கள், டெங்கு ஒழிப்புக் குழுக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாடசாலை வளாகங்களைச் சோதனையிட்டு, டெங்கு பெருகும் இடங்களை அகற்றும் விசேட நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு பெருகும் இடங்கள் அதிகரிப்பு
மழைக்காலங்களில் டெங்கு பெருகும் இடங்கள் அதிகரித்தாலும், மழை இல்லாத காலங்களிலும் இவ்வாறான இடங்கள் காணப்படலாம் என்பதால் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடு, பணிபுரியும் நிறுவனம் மற்றும் பாடசாலை வளாகங்களைத் தொடர்ச்சியாகப் பரிசோதிக்க வேண்டும்.
பொதுவாக டெங்கு கொசுக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலும், மாலை வேளையிலும் கடிக்கக்கூடும் என்றாலும், அவை கட்டட வளாகத்துக்குள் நுழைந்துவிட்டால் பகல் நேரங்களிலும் மனிதர்களைக் கடிக்க வாய்ப்புள்ளது.

இலங்கையில் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே மிக அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். எனினும், தற்போதும் மாதமொன்றில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 559 நோயாளர்களும், 27 மரணங்களும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.
அதிகளவில் நோயாளர்கள் பதிவாகும் மாவட்டங்கள்
இந்த நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, காலி, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவில் பதிவாகியுள்ளனர்.
தற்போது சில மாவட்டங்களில் மாத்திரமே இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. நாடு முழுவதும் இது ஒரு தொற்றுநோயாக இன்னும் மாறவில்லை.

2017 ஆம் ஆண்டு போன்றதொரு மோசமான நிலை ஏற்படுவதைத் தடுக்கவே இந்தத் தீவிர நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்படுகின்றன. டெங்கு என்பது ஆரம்பத்திலேயே சரியாகக் கண்டறியப்பட்டால் மிக விரைவாகக் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். எனினும், சிலருக்கு நோய் குணமாகிய பின்னரும் அதிக சோர்வு காணப்படலாம். முறையான ஓய்வு எடுப்பதன் மூலம் இந்தச் சோர்வைக் குறைத்துக்கொள்ள முடியும். சில சந்தர்ப்பங்களில் இந்நோய் தீவிரமடைந்து, நுரையீரலில் நீர் கோர்க்கும் நிலையும் ஏற்படலாம் என்பதால், தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்ளாது முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று, முழுமையான ஓய்வில் இருப்பதே மிக முக்கியமானது என்றார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan