றிசாட் பதியுதீனை விடுதலை செய்ய கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் இன்று (29) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் அதிகாலையில் கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைவாதகவும், நாடாளுமன்ற உறுப்பினரான அவரை கைது செய்வதாகச் சபாநாயகருக்குக் கூட அறிவித்தல் விடுக்கப்படவில்லை எனவும், குறித்த கைதினை வண்மையாகக் கண்டிப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். எனவே ஜனாதிபதி, பிரதமர், சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து றிஸாட் பதியுதீனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு குறித்த கைதினை கண்டித்ததோடு, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை இடம் பெற்றமை
குறிப்பிடத்தக்கது.