ஜே.வி.பியும் பேரினவாத கட்சி என்பதை நிரூபித்து விட்டது..! சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் சாடல்
மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் பேரினவாத கட்சி என்பதை நிரூபிக்க தொடங்கி விட்டதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் எழுதும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்ச் சூழலில் மாகாணசபைத் தேர்தல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோராவர்.
இந்த இருவருடைய கருத்துக்களும் தமிழ்ச் சூழலில் பலத்தவாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளன. ஊடகங்களும் அதனை முக்கிய பேசு பொருளாக்கியுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது. அடுத்த வருடமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாகாண சபைத் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதி டித்வா புயல் நிவாரண நிதிக்காக செலவிடப்பட்டமையால் தேர்தல் நடாத்த அரசாங்கத்திடம் நிதியும் இல்லை எனக் கூறிருந்தார்.
இதனையடுத்து, உடனடியாகவே இதற்குப் பலத்த எதிர்ப்பு தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்தும் சிங்கள எதிர்க்கட்சிகளிடமிருந்தும் வந்தன.
இந்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் இரண்டு வகைகளில் வெளிவந்தன. ரில்வின் சில்வா அரசாங்கத்தில் பதவிவழி அங்கத்தவராக இல்லை. அரசாங்கத்தோடு பதவிவழித் தொடர்பு இல்லாதவர் எவ்வாறு தேர்தல் நடக்காது எனக் கூற முடியும். அதனை ஜனாதிபதியோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ, அமைச்சரவைப் பேச்சாளரோ தெரிவித்திருக்க வேண்டும் என்ற வகையில் கண்டனம் எழுந்திருந்தது.
தேர்தல் நடக்காது எனக் கூறுவதற்கு ரில்வின் சில்வா யார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேட்டிருந்தார். பெலவத்தையா அரசாங்கத்தை நடாத்துவது? என கண்டனக் குரல்களும் எழுந்திருந்தன. இது முதலாவது வகை எதிர்ப்பாகும்.
தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி
இரண்டாவது வகை எதிர்ப்பு நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உரியது. நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு டித்வா நிவாரண நிதிக்கு செலவிட முடியும் என்ற வகையில் எழுந்திருந்தது.
ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ உடனடியாகவே மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே உள்ளது என ரில்வின் சில்வாவின் கருத்துக்கு மறுப்புக் கூறியிருந்தார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டம் உருவாக்கப்படாமையே காரணம் எனவும் கூறியிருந்தார். அது பற்றி தீர்மானம் எடுப்பதற்காகவே நாடாளுமன்றத் தெரிவிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்கேற்ப மாகாண சபைத் தேர்தல் பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

உண்மையில் காலத்தை இழுத்தடிப்பதற்காகவே தெரிவுக் குழு உருவாக்கப்பட்டது என்ற கருத்து இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்றது. சிங்கள ஆய்வாளர் ராஜன் பிலிப்ஸ் “தெரிவுக்குழு ஒரு தேவையற்ற திசைதிருப்பல்” எனக்கூறியிருக்கின்றார்.
பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் 25 வீத ஒதுக்கீடு வேண்டும் என்ற கருத்தும் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனையும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் 25 வீதத்தினை ஒதுக்கத் தயார் எனக் கூறியிருந்தன.
தேர்தல் சட்டத்தை மாற்றும்போது அதனையும் சேர்ப்பதற்கும் அவை இசைவு தெரிவித்துள்ளன. சட்டத்தை திருத்தி பழைய முறையில் தேர்தலை நடத்தலாம் என எதிர்க்கட்சிகள் ஏகமனதாக தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருந்தன.
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்
அரசாங்கம் தேர்தலை நடத்த விரும்பாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. தோல்விப்பயம், பேரினவாத நிலைப்பாடு, மாகாணசபை முறை மீதான வெறுப்பு என்பனவே அந்த மூன்று காரணங்களுமாகும். இதில் பிரதானமானது தோல்விப்பயமாகும்.
சிங்களப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமை, தரமற்ற நிலக்கரி இறக்குமதி, இணைய மோசடியில் திறைசேரி பணத்தை இழந்தமை, விலைவாசி உயர்வு, என்பனவே செல்வாக்கிழப்பிற்கு காரணங்களாக உள்ளன.

நிர்வாக ஆற்றல் அரசாங்கத்திடம் குறைவு என்ற கருத்தும் சிங்கள மக்கள் சிலரிடம் உண்டு. ரணில் “எல்போட்”அரசாங்கம் என அரசாங்கத்தை பரிகாசித்துள்ளார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத் தேர்தலை விட 25 லட்சம் வாக்குகள் குறைவாகக் கிடைத்திருந்தன.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடந்தால் மேலும் குறையலாம். எதிர்க்கட்சிகள் மக்கள் விடுதலை முன்னணியும் பேரினவாத கட்சி என்பதை நிரூபிக்க தொடங்கி விட்டதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு இதுவே காரணமாகும். இந்த உண்மையை தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். தற்போது கொஞ்சமாவது தேசிய மக்கள் சக்திக்கு சார்பாக இருப்பது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையின்மை தான்.
பிரஜா சக்தி முயற்சிகளும் வடக்கு கிழக்கில் பெரிய வெற்றியைக் கொடுத்ததாக தெரியவில்லை. அது கிராமிய அபிவிருத்தியோடு தொடர்புபட்டது. அதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை. இதனால் கிராமிய அபிவிருத்தி வெறும் பேச்சளவில் உள்ளதே தவிர செயலளவில் பெரிதாக சோபிக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் பேரினவாத நிலைப்பாடு
இரண்டாவது தேசிய மக்கள் சக்தியின் பேரினவாத நிலைப்பாடாகும். மாகாண சபைத் தேர்தல் நடந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு சுயாதீனமான அரசியல் களம் கிடைத்துவிடும் என்ற அச்சம் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. இந்த அரசியல் களத்தை தேசிய மக்கள் சக்தியினர் விரும்பவில்லை.
முன்னர் ஒரு தடவை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் நாடாளுமன்றம் சிங்கள தேசத்திற்கு எவ்வாறு ஒரு அரசியல் களமாக இருக்கின்றதோ அதேபோல வடமாகாண சபை தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் களமாக இருக்கும். எனவே மாகாணசபை முறையை எதிர்க்க வேண்டாம் என இந்தக் கட்டுரையாளரிடம் வேண்டியிருந்தார்.

இதைவிட மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் 13 வது திருத்தத்திலுள்ள அதிகாரங்களை முழுமையாக வழங்கும் படி கோரிக்கைகள் வரும் எனவும் அரசாங்கம் அஞ்சுகின்றது. அந்தக் கோரிக்கைகளை பிராந்திய, சர்வதேச சக்திகளும் ஏற்றிருப்பதால் அவற்றிடமிருந்தும் அழுத்தங்கள் வரப்பார்க்கும். இந்த அழுத்தங்களை தவிர்க்கவே அரசாங்கம் விரும்புகின்றது.
வட மாகாண சபை செயற்படத் தொடங்கினால் சர்வதேச இராஜதந்திரிகளும் அதனை அவதானிக்கத் தொடங்குவர். முதலமைச்சரையும் சந்திக்க முனைவர். இந்த முக்கியத்துவங்களையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரும்பப்போவதில்லை.
மூன்றாவது தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி மாகாண சபை முறையை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட கட்சியல்ல. ஆரம்ப காலம் தொடக்கமே மாகாண சபை முறைக்கு எதிராக போராடியது.
இலங்கை - இந்தியா ஒப்பந்தம்
இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தையும் அதன் வழிவந்த இந்திய அமைதிப் படையையும் எதிர்த்து ஆயுதப் போராட்டத்தையும் நடாத்தியது. இந்த அரசியல் நிலைப்பாடும் தேர்தலை நடாத்தாமையில் பங்கு செலுத்துகின்றது. மொத்தமாகப் பார்க்கும் போது மாகாண சபைத் தேர்தல் தற்போதைக்கு நடைபெறப் போவதில்லை என்றே கூறலாம்.
சர்வதேச பிராந்திய அழுத்தங்கள் ஏதாவது பெரிதாக வந்தால் அரசாங்கம் தேர்தலை நடாத்த முயற்சிக்கலாம். குறிப்பாக பிராந்திய அழுத்தம் வர வேண்டும். ஆனால் இந்தியா தற்போது அதற்குத் தயாராக உள்ளது எனக் கூற முடியாது.
அரசாங்கத்துடனான நல்லுறவினை பகைத்துக் கொள்ள அது விரும்பவில்லை. மேலோட்டமாக “மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்” எனக் கூறப் பார்க்குமே தவிர இந்த விடயத்தில் வன்னழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கப் போவதில்லை.
சிங்கள எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பேணுவதற்காக மாகாண சபைத் தேர்தலை ஆதரிக்கவில்லை. மாறாக அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்காக தான் ஆதரிக்கின்றன.
அரசாங்கத்தை பலவீனப்படுத்த தற்போது அதற்குள்ள பிரதான ஆயுதம் மாகாண சபைத் தேர்தல்தான். அதற்காகத்தான் மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்துகின்றன. ஆனால் அதனை ஒரு போராட்ட இயக்கமாக முன்கொண்டு செல்ல தயாராக இருக்குமெனக் கூற முடியாது.
மனோகணேசனின் கருத்து
மனோகணேசன் இந்திய அரசு இனிமேல் இலங்கை தேசிய இனப்பிரச்சனையில் தலையிடாது. 13 வது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை தக்கவைத்துக் கொள்வது பற்றி தீர்மானிப்பது இலங்கையர்களின் பொறுப்பாகும்.
வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவுடனான உறவை சரியான முறையிலும் சரியான நேரத்திலும் பயன்படுத்தத் தவறிவிட்டன ஆகிய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். இந்தக் கருத்துக்கள் மிகவும் அபத்தமானவையாகும்.
இந்தியா தேசிய இனப் பிரச்சனையில் தலையிடாது என உறுதியாக மனோகணேசன் கூறுகின்றார். அப்போ இந்தியா ஏன் தனது வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கையின் “ஆள்புல மேன்மையும் தமிழர்களின் சமத்துவமும்” என்பதை அரசியல் நிலைப்பாடாகக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட புவிசார் அரசியல் இன்னமும் முடிவு நிலைக்கு வரவில்லை. இந்த புவிசார் அரசியல் தேசிய இனப் பிரச்சினையில் தலையிட வேண்டிய தேவையை இந்தியாவுக்கு உருவாக்கும்.
மேலும், தமிழ்நாடு எப்போதும் அழுத்த சக்தியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இந்தியாவிலுள்ள முக்கிய மாநிலமாகும்.
தமிழ்நாட்டின் அபிலாசைகளை புறக்கணித்துவிட்டு இந்திய மத்திய அரசினால் நகர முடியாது. 13 வது திருத்தம் இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை தக்க வைத்துக் கொள்வது பற்றி தீர்மானிப்பது இலங்கையர்களின் பொறுப்பாகும் என்கின்றார்.
13 வது திருத்தம்
13 வது திருத்தம் இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்கின்ற போதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இது அனைவரும் அறிந்த விடயம்.
தேசிய இனப் பிரச்சனை சாராம்சத்தில் உள்நாட்டுப் பிரச்சினையல்ல. இது ஒரு சர்வதேசப் பிரச்சனையாகும். எனவே தேசிய இனப்பிரச்சனைக்கு சர்வதேச தீர்வுதான் உண்டே தவிர உள்நாட்டு தீர்வு கிடையாது.
13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றாமை, இன்று மாகாண சபைத் தேர்தலைக் கூட நடாத்த பின்னிக்கின்றமை என்பன இதனையே வெளிப்படுத்துகின்றன.

சர்வதேச அழுத்தம் இல்லாமல் மாகாண சபைத் தேர்தலையே நடாத்த முடியாமல் இருக்கின்றது என்பதே உண்மை நிலையாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மாகாணசபை முறை உருவாக்கப்பட்டது.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்கள் சம்பந்தமாக இருந்த போதும் அதில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவில்லை. தமிழ் மக்களின் நலன் பேணும் பொறுப்பை இந்தியாவே பலவந்தமாக எடுத்துக் கொண்டது. அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டியது.
இந்தியாவின் தார்மீகப் பொறுப்பாகும். இதிலிருந்து இந்தியா விலகுவது தார்மீக அறநெறிக்கு ஏற்றதல்ல. இங்கு மனோகணேசன் இந்தியாவை பிணையெடுக்க முற்படுகின்றார். இது மனோ கணேசனின் அரசியலுக்கும் ஏற்றதல்ல. சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு இந்தியாவே பொறுப்பாகும் என முன்னர் ஒரு தடவை மனோகணேசன் கூறியிருந்தார்.
சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம்
சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தமும் இலங்கை - இந்திய ஒப்பந்தமும் அதன் அரசியலைப் பொறுத்தவரை ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. இரண்டிலும் சம்பந்தப்பட்ட மக்களின் பங்களிப்பு பெறப்படவில்லை.
நாளை சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் தொடர்பாகவும் இந்தியாவிற்கு பொறுப்பில்லை என மனோகணேசன் சொல்லக் கூடும். இந்தியாவுடனான உறவை தமிழ்க் கட்சிகள் சரியான முறையில் கையாளவில்லை என்றும் மனோகணேசன் குற்றம் சாட்டுகின்றார்.
13 வது திருத்தம் வெளியான போது அதன் போதாமைகள் பற்றி இந்திய அரசுக்கு அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி தெரியப்படுத்தியிருந்தது. ஆனால் இந்திய அரசு எதனையும் செய்யவில்லை.

உண்மையில் இலங்கை ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு இந்தியா தமிழ் மக்களை கைவிட்டு விட்டது. ஆயுதப் போராட்டத்தை அழித்ததிலும் இந்தியாவிற்கு பெரும் பங்குண்டு.
இன்று தமிழ் மக்களைப் பேரினவாதத்தின் வாயில் கொண்டு போய் விட்டதில் இந்தியாவின் பங்கினை குறைத்து மதிப்பிட முடியாது. இதற்கெல்லாம் பிராயசித்தம் செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.