ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் வசூலிப்பது ஆபத்தானது
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் 'நியாயமற்றது' என்று சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஈரான் இதனை நேரடியாக 'சுங்கக் கட்டணம்' என்று அழைக்காமல், கடல் வழிப்பாதையை எளிதாக்குவதற்கும், கப்பல்களை வழிநடத்துவதற்கும் விதிக்கப்படும் சேவைக்கட்டணம் என்று மாற்றி அழைக்கிறது.
தற்போதைய புதிய கட்டுப்பாடுகள்
மிகக் கடினமான கடல் வழிப்பாதைகளில் இத்தகைய நடைமுறையைக் கொண்டு வருவது உலகளாவிய கடல்சார் போக்குவரத்தில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஈரான் சர்வதேசக் கடல் பாதையில் கட்டணம் வசூலிக்கலாம் என்ற வாதம் முற்றிலும் வேடிக்கையானது" என்று அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புதிய அமைதி உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையிலும், உலகின் மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடத்தில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் மாற்றுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக வெல்லர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கடந்த கால மோதல்கள் மற்றும் ஈரானின் தற்போதைய புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, வணிக ரீதியிலான கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இந்த கடல் பாதையின் மீது மீண்டும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.