முடிவுக்கு வந்து விட்ட என்.பி.பி அரசின் ஆயுள்! பொதுஜன ஐக்கிய முன்னணி கடும் சாடல்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பழிவாங்கும் விசாரணைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்துப் பொதுஜன ஐக்கிய முன்னணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
அத்துடன், நாட்டை நாளுக்கு நாள் படுகுழிக்குள் தள்ளி வரும் தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அக்கூட்டமைப்பு சாட்டியுள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று(16.06.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் முக்கியஸ்தர்களான ஜனக ரணவக மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- "முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேயின் பெயரைக் கேட்டாலே தற்போதைய அரசாங்கம் அச்சத்தில் நடுங்கத் தொடங்குகின்றது.

நாட்டிற்காகத் தனது உயிரைப் பணையம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு உயர்மட்ட புலனாய்வு அதிகாரியை, எவ்வித மனிதநேயமுமின்றி பழிவாங்கும் நோக்குடன் சி.ஐ.டி-யினர் விசாரித்து வருகின்றனர்.
சுரேஷ் சலேயைக் கட்டாயப்படுத்தித் தரையில் அமர வைத்து, சீமெந்து தரையிலேயே அவருக்கு உணவு வழங்கும் அளவுக்கு மோசமான சித்திரவதைகள் உள்ளே அரங்கேறி வருகின்றன. இது சட்டம் தன் கடமையைச் செய்யும் உத்தியோகபூர்வ முறைமை அல்ல.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகள் என்ற பெயரில், சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தற்போது உயிருக்கும் மரணத்திற்கும் இடையிலான ஒரு கொடூரமான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.
அவரைப் பற்றிய உண்மைகள் வெளியில் கசிவதைத் தடுத்து, அந்தப் பேச்சுகளை முற்றாக மூடிமறைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
பெற்றோல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு
குறிப்பாக, சர்ச்சைக்குரிய பின்னணியைக் கொண்ட ஷானி அபேசேகர போன்ற ஒரு அதிகாரியிடம், நாட்டின் தேசிய பாதுகாப்புப் பிரிவு தரவுகள் அடங்கிய முக்கிய கடவுச்சொற்களை எக்காரணம் கொண்டும் அரசாங்கம் ஒப்படைக்கக் கூடாது.

சுரேஷ் சலே விவகாரத்தில் நாங்கள் பேசும் போது, நாங்கள் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
உண்மையில் நீதிமன்றத்தை அப்பட்டமாக அவமதித்தது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கதான். ஏனெனில், தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள ரவி செனவிரத்னவுக்கு எதிராகக் கல்கிஸ்சை நீதிமன்றத்தில் சட்டபூர்வ வழக்கு நிலுவையில் உள்ளது.
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இருவருமே உண்மையாக நீதிமன்றத்தை அவமதித்தவர்களாவர்.
மறுபுறம், தற்போதைய அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணம், டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளன.
முன்கூட்டிய புலனாய்வுத் தகவல்கள்
எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட கடற்கரையோர வீடுகளுக்கு அரசாங்கம் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காது ஏமாற்றியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து சிறி லியனகமனி பிதாவுக்கு இருக்கும் வேதனையை விட, தேசப்பற்றுள்ள எங்களுக்கு அதிக வேதனை இருக்கின்றது.
இத்தாக்குதல் குறித்த முன்கூட்டிய புலனாய்வுத் தகவல்கள் அனைத்தும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவினருக்குத் தாக்குதலுக்கு முன்னரே கிடைத்திருந்தது.
அவர் நினைத்திருந்தால் இந்தத் கொடூரத் தாக்குதலை மிக எளிதாகத் தடுத்திருக்க முடியும்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் தன்சல் வரிசையில் இடம்பெற்ற கோர விபத்து - சந்தேகநபர்களுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri