ஸ்பெயினில் கொடூர காட்டுத்தீ: 12 பேர் பலி - 19 பேர் மாயம்
தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா பிராந்தியத்தில் உள்ள அல்மேரியா மாகாணத்தில் திடீரெனப் பரவிய காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த பிராந்தியத்தின் சமீபத்திய வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ பரவல்
மேலும், இந்த விபத்தில் 19 பேரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வியாழக்கிழமை மதியம் லாஸ் காஸார்டோஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, பலத்த காற்று மற்றும் ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு அதிவேகமாகப் பரவியது.
தீயில் சிக்கித் தப்பிக்க முயன்ற போது வாகனங்களுக்குள்ளேயே மாட்டிக்கொண்டு பலர் உயிரிழந்துள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவ அவசரக்காலப் பிரிவு
மேலும், இக்கோர விபத்தில் காயமடைந்த 6 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் பிரிவு (UME) உட்பட 300-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பலத்த புகைமூட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள இரு முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்ததே இந்தத் தீ விபத்திற்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்திற்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார்.