விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிராக மீண்டும் நெருக்கடி
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சியங்களை நவம்பர் 11 ஆம் திகதி விசாரிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று(01.07.2025) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலி பிறப்புச் சான்றிதழைக் காட்டி இராஜதந்திர கடவுச்சீட்டை சட்டவிரோத முறையில் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சஷி வீரவன்ச மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதியான சஷி வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்படி அரசு தரப்பு சார்பில் முன்னிலையாகவிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் சாட்சியப் பரிசோதனயில் ஈடுபட்டு வருவதால், அரசு தரப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைய , வழக்கை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
எச். சமிந்த என்ற நபர் அளித்த முறைபாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை இந்த வழக்கைத் தாக்கல் செய்து, சஷி வீரவன்சவை பிரதிவாதியாக பெயரிட்டுள்ளது.
முன்னதாக இந்தக் குற்றச்சாட்டிற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சஷி வீரவன்ச, கடந்த மே 31, 2022 அன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.