வெளிநாடொன்றில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இராணுவம் அதிரடியாகத் தடை
புர்க்கினா பெசோ (Burkina Faso) நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்நாட்டு இராணுவ அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கெப்டன் இப்ராகிம் ட்ராரோ (Ibrahim Traoré) தலைமையிலான அரசாங்கம், நாட்டில் நிலவும் பிரிவினைகளைத் தவிர்க்கவும், நாட்டை மறுசீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும்
இது குறித்து உள்துறை அமைச்சர் எமில் ஜெர்போ (Emile Zerbo) கூறுகையில், "நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மக்களிடையே ஒற்றுமையின்மையை வளர்ப்பதுடன், நாட்டின் சமூகக் கட்டமைப்பைச் சிதைக்கின்றன. எனவே அவை அனைத்தும் கலைக்கப்படுகின்றன" என அறிவித்துள்ளார்.

இந்தத் தடையைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளின் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்படும் என்றும், இது தொடர்பான புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2024 ஜூலை மாதத்திற்குள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்த இராணுவ அரசு, பின்னர் தனது ஆட்சிக் காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
ட்ராரோ தலைமையிலான இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி என விமர்சகர்கள் கூறினாலும், அவரது ஆதரவாளர்கள் இதனை நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கின்றனர்.
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri