இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக ஒழுங்கு மாறிவிட்டதாகவும், மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விட்டதா? என பரவலான விவாதங்கள் நிகழ்கிறது. இன்றைய உலகலாவிய அமைப்பு முறைமையை(global system) எப்போதாவது மாற்றத்திற்கு உள்ளானதா? அல்லது உலக ஒழுங்கு(World order) எப்போதாவது, மாற்றமடைந்ததா? என்பதனை வரலாற்று நோக்கிலும், அரசியல் தத்துவார்த்த கண்ணோட்டத்திலும் ஆராயப்பட வேண்டியது அவசியமானது.
உலக அரசியல் போக்ககை(Global political process ) சரிவர இனம் காணாமல் உலகலாவிய அரசியலை புரிந்துகொள்ள முடியாது. உலகம் ஒழுங்கு(World order) என்பது உலகின் அனைத்து நாடுகளும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்கின்ற ஒரு ஒழுங்கு என்பதாகும்.
இத்தகைய உலக ஒழுங்கு நினைத்த மாத்திரத்தில் மாறிவிடும் என்றோ, அல்லது ஒரு சில தனிநபர்களினாலோ அல்லது ஒரு சில நாடுகளினாலோ உடனடியாக மாற்றி விடலாம் என்று எண்ணுவது அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடாகும்.
உலக ஒழுங்கின் போக்கை சரிவர இனம் கண்டால் மட்டுமே அந்தந்த காலகட்டத்திற்குரிய சரியான அரசியல் முடிவுகளை எடுத்து ஒரு இனமோ அல்லது ஒரு நாடோ நிலை பெற முடியும். ஒரே நாளில் இந்த முழு உலகத்தின் உலக ஒழுங்கை மீளவும் ஒழுங்குபடுத்திய சம்பவம் 2001 செப்டம்பர் 11ல் பில்லேடனின் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலுடன் நடந்தேறியது. எந்த வகையில் என்றால் சர்வதேச பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற ஒன்றை இந்த உலகத்தின் 196 நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டமைதான்.
சர்வதேச ஒழுங்கு
அதுதான் இன்றையஅனைத்து நாடுகளின் சட்டங்களுக்கும் தாய்ச் சட்டமாக விளங்குகிறது. அதனைத் தவிர வேறு எதுவும் உடனடியாக ஒரு உலக ஒழுங்கில் தாக்கத்தை செலுத்தவில்லை. ஆனால் சர்வதேச ஒழுங்கில்(International order) ஆங்காங்கே பிராந்தியங்களுக்கு இடையிலும், கண்டங்களுக்கிடையிலான ஒழுங்கு மாற்றங்கள் நிகழும். அந்த ஓழுங்கு மாற்றத்தில் பல நாடுகள் பங்குபெற்றுவதனால் அதனை சர்வதேச ஒழுங்கு என்கிறோம்.

ஆனால் இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கு(International order) என்பது விஞ்ஞான தொழிநுட்பத்தில்த்தான் தங்கியுள்ளது. விஞ்ஞான தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களின் மூலகர்தாக்களான(brainchild) யூதர்கள் அமெரிக்கா பக்கமே எப்போதும் இருப்பர்.
ஆதலால் சர்வதேச அரசியல் ஒழுங்கில் சில மாற்றங்களை மடடுமே அமெரிக்காவால் ஏற்படுத்த முடியும். கடந்த வருடத்தின் இறுதி வாரத்தில் இஸ்ரேல் ஆப்பிரிக்காவின் ஒரு இஸ்லாமிய நாட்டை அங்கீகரித்தமையும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா படைகள் வெனிசுலா நாட்டுக்குள் அத்துமீறி தரையிறங்கி வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்த அமையும், அதன் பின்னர் டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிரீன்லாந்து தீவை தான் எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தமையும், அட்லாண்டிக் கடலின் வடபகுதியில் பயணித்த ரஷ்ய எண்ணைய் கப்பல்களை கைப்பற்றியமையும், ஈரான் மீது போர் என அறிவித்தமை போன்ற காரணங்களால் ஆங்காங்கே ஏற்படக்கூடிய சண்டைகளும், தாக்குதல்களும் ஒரு மூன்றாம் உலகப்போராக மாறப்போவதில்லை.
அதேபோல இன்றைய உலக ஒழுங்கில்(World order) டிரம்ப் என்கின்ற அமெரிக்க ஜனாதிபதியால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. இன்று நிலவுகின்ற உலகலாவிய அமைப்பு முறைமை (global system) என்பது கடந்த 4500 ஆண்டுகால பண்டங்களின் கொடுக்கல் வாங்கல்கள் எனப்படும் பண்டமாற்று வர்த்தகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பொருளாதாரமாக வளர்ச்சி கண்டு முதலாளித்துவ பொருளாதார தளத்தில் கட்டமைக்கப்பட்ட அரசியல் பொருளியல் முறைமைப்பாகும்.
இந்த உலக முறைமையில் இருந்து வளர்ச்சியடைந்த இன்றைய அரசியல் பொருளியல் ஒழுங்கமைப்பை இலகுவிலோ அல்லது ஒரு குறுகிய காலத்திலோ அல்லது ஒரு தனிநபராலோ மாற்றிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கின்ற முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு மையத்தில் உருப்பெற்று வளர்ச்சி அடைந்த அரசியல் முறைமையை முதலில் கார்ஸ் மார்க்ஸ் தனது கருத்தியல் புரட்சியின் மூலம் கேள்விக்கு உட்படுத்தினார்.
அவருடைய மார்க்சிச கோட்பாடு 19ம் நூற்றாண்டில் பொருளாதாரக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கி புதிய சிந்தனையை தூண்டியது. அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முதற் கால் நூற்றாண்டு பகுதியில் லெனின் மாக்ஸின் கோட்பாட்டை தன்கையில் எடுத்து அதை இன்னொரு படிக்கு வளர்த்துச் சென்று சோஷலிசப் புரட்சியை வென்று சொற்பகாலம் சோசலிச பொருளாதார முறைமையை நடைமுறைப்படுத்தி காட்டினார். இந்த இருவர் மட்டும்தான் இந்த உலகின் முறைமையை மாற்றியமைக்க முனைந்தவர்களும், அதனை சவாலுக்கு உட்படுத்திய மனிதர்களாவர்.
லெனின் சர்வதேச ஒழுங்கு
ஆனால் லெனின் சர்வதேச ஒழுங்கை(International order) சிறிதுகாலம்
மட்டுமே மாற்ற முடிந்தது.
இவர்களைவிட யாரும் உலக ஒழுங்கு முறமையை கேள்விக்கு
உள்ளாக்கவோ, சவாலுக்கு உட்படுத்தவோ இல்லை. லெனின ஆரம்பித்த
பொருளியல் கட்டமைப்பை வளர்த்துச் செல்ல ஏனையவர்களால்
முடியாமல் போனமைதான் சோவியத்யூனியன் வீழ்ந்து நொருங்கியமை
கண்முன்னே கண்டோம்.
இந்த இரட்டை மையப் பொருளாதார அரசியல் அதிகாரம்(Power politics) நிலவிய காலத்தலும் உலகலாவிய அமைப்பு முறைமை(global system) வர்த்தக பொருளியலில் தளத்திளோயே இருந்தது. இரண்டு பொருளாதார அதிகார மையங்கள் இந்த பூமிப் பந்தல் நிலைபெற முடியாது என்பதை ஒரு பனிப்போர்காலம் முடிவடைகிறபோது நிரூபணம் ஆகிவிட்டது.
அதே நேரத்தில் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு உலகின் அரசியல் ஒழுங்கை தாம் நினைத்த மாத்திரத்தில் மாற்றி அமைக்க நெப்போலியனும், ஹிட்லரும் முயன்று தோற்றுப் போனார்கள். அவர்கள் வரலாற்றில் யுத்த பிரபுக்களாகவே பதிவாகின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலக ஒழுங்கில்(World order) அதிகாரமைய கைமாற்றம் மாத்திரமே நிகழ்ந்தது.
அது ஐரோப்பிய அதிகார மையத்தில் இருந்து அமெரிக்க அதிகார மையமாக மாறியமையே நிகழ்ந்தது. இப்போது அமெரிக்கா தலைமையிலான ஒற்றை மைய அரசியல் அதிகார ஒழுங்கு என்பது சற்று குழப்பகரமானதாக தோன்றக்கூடும். ஆயினும் உலக அதிகார ஒழுங்கு மாறவில்லை.
ஆனால் ஒற்றை பொருளாதார அடித்தளத்தில் பல அதிகாரம் மையங்கள் தோற்றம் பெறுவதான தோற்றப்பாடு வெறும் கற்புலனுக்கு தென்படுவதை பலரும் உண்மை என நம்பவும் தலைப்பட்டனர். ஆயினும் அரசியல் தத்துவார்த்தத்தில் பலமுனை அதிகாரம் மையங்கள் ஒருபோதும் தோன்ற முடியாது. அதிகார மையங்கள் இரண்டாக மட்டுமே இருக்க முடியும்.
அதனையும் மீறி ஒரு மூன்றாவது அதிகாரம் மையம் தோன்றுமேயானால் அது ஏற்கனவே இருக்கின்ற இரண்டு அதிகார மையங்களில் எது பலமானதோ அந்தப் பலமான அதிகாரம் மையத்திற்கு சேவகம் செய்கின்ற அல்லது அதனை பலப்படுத்துகின்ற ஒரு அதிகாரம் மையமாகவே அமைய முடியும். இன்றைய அரசியல் பொருளியல் உலகில் சீனா வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதார வல்லரசு.
அதே நேரத்தில் அமெரிக்கா ஸ்தாபிதம் அடைந்துள்ள அரசியல் பொருளியல் இராணுவ அதிகார வல்லரசு. ஜப்பானும் பலம் பாய்ந்த ஒரு பொருளாதார வல்லரசு ஆயினும் அது தனது அரசியல் அதிகாரத்தை அமெரிக்காவின் பின்னாலேயே நின்று தனது நலன்களை பெற்றுக் கொள்ளும்.
இந்தியா
ரஷ்யா இரட்டை மைய உலக அரசியலில் தலைமை தாங்கிய நாடு. அது உலகம் தழுவிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தியமை போன்று இன்று சர்வதேச அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலையில்லை. அதனுடைய அரசியல் அதிகாரம் என்பது அதனுடைய பிராந்தியத்துக்குள் சுருக்கப்பட்டு புவிசார அரசியலை அதனுடைய தேசிய நலனாகவும், தேசிய இலக்காகவும் கொண்டுள்ளது. ஆகவே இப்போது ரஷ்யாவை பொறுத்த அளவில் அது கிழக்கு ஐரோப்பாவுடன் தன்னுடைய தேசிய நலனை வரையறுத்து எல்லையிட்டுக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியா உலகின் பெரும் சனத்தொகையோடு தன்னை பொருளியல் ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் அறிவியல் துறையிலும் வளர்ந்துவரும் பிராந்திய வல்லரசு. இந்தியா வளர்ந்துவரும் நாடு என்ற அடிப்படையில் அது தன்னை ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக உலகளாவிய ரீதியில் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. ஆயினும் அது தனது பிராந்தியத்தில் புவிசார் அரசியலை மையப்படுத்தியதாக தனது பாதுகாப்பு வலையத்துக்குள் உட்பட்டிருக்கின்ற நாடுகள்மீது செல்வாக்கு செலுத்தும்.
அதே நேரத்தில் தனது சர்வதேச நலன்களையும், விருப்பங்களையும் அமெரிக்கா சார்ந்த மேற்குலகத்துடனும், ரஷ்யாவுடனும் கூட்டு சேர்ந்து தனது நலன்களை அடைந்து கொள்ளும். இந்தியாவினுடைய மிகப்பெரிய சனத்தொகை உலகம் தழுவிய அரசியலில் அதற்கு ஒரு பெரும் பலம்.
பெரிய மக்கள் தொகை உலகளாவிய அரசுகளின் சந்தை வாய்ப்புக்களம். ஆகவே அனைத்து வர்த்தக நாடுகளுக்கும் இந்தியாவின் சந்தை மிக அவசியமானது. ஆகவே இந்தியாவுடன் பகைக்க எந்த பொருளாதார சக்திகளும் ஒருபோதும் விரும்பாது. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி, ஏன் சீனாவாக இருந்தாலும் அவ்வாறுதான் இருக்கும். ஆயினும் சீனாவுடன் இந்தியா அண்டை நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் நிலப்பிரதேசங்களை ஆக்கிரமித்த நாடு என்ற அடிப்படையில் அதற்கான ஒரே ஒரு எதிரி நாடாகவே உள்ளது.
எனவே சீனா இந்தியாவின் புவிசார் அரசியல் பிராந்தியத்துக்குள் குறிப்பாக இந்து சமுத்திரத்தில் தனது பாதுகாப்பு எல்லைக்குள் சீனா நிலை கொள்வதை இந்தியா ஒருபோதும் விரும்பாது, அதனை அனுமதிக்கவும் மாட்டாது. இந்தியாவின் தேசிய நலன் என்பது தனது புவிசார் அரசியலைப் பலப்படுத்துவதும், சர்வதேச வர்த்தகத்தில் தனது நிலையை உயர்த்துவதும் மட்டும்தான் இன்றைய இலக்காக உள்ளது.
அதன் தேசிய நலன்களும், விருப்புக்களும், இலக்குகளும் எதிர்காலத்தில் மாற்றமடைந்தே தீரும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் சீனாவின் தேசிய நலன் என்பது உலகம் தளவிய அரசியலில் செல்வாக்கு செலுத்துவதும், உலகளாவிய வர்த்தகத்தில் தனது ஏகோபோக நிலைமையை நிலை நாட்டுவதற்கு தேவையான பண்டங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை உலக நாடுகளில் இருந்து சீனாவுக்கு கொண்டு செல்வதும்தான்.
அவ்வாறு தான் வர்த்தகத்தை செய்வதற்கு தனது ராணுவத்தையும், கடற்கரையையும் பலப்படுத்தி கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டி உள்ளது. அதற்காகவே இப்போது உலகம் தளவிய வர்த்தக பாதையின் தாய்க்கடலான இந்து சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முனைந்திருக்கின்றது.
ஈரான்
அதனை நிறைவேற்றவே இந்து சமுத்திரத்தில் கொகோத்தீவு, இலங்கையின் அம்பாந்தோட்டத் துறைமுகம், மற்றும் மாலதீவு, பாகிஸ்தானின் குவார்தர் துறைமுகம், கெனியாவின் லாமோ துறைமுகம் ஆகிய இடங்களில் தனது துறைமுக கட்டுமானங்களை மேற்கொண்டு தனது செல்வாக்கை நிலை நாட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதே நேரத்தில் ஏடன் வளைகுடாவில் ஜிபூட்டியில் ஒரு பலமான ராணுவ தளத்தையும் அமைத்து விட்டது.

இதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அடிக்கல்லை இட்டுவிட்டது என்றே கூற வேண்டும். அதேநேரத்தில் அது மத்திய கிழக்கில் இருக்கின்ற ஈரானையும் தன்னுடன் கூட்டு சேர்த்துள்ளது. இதுதான் இன்றைய அரசியல் அதிகாரப் போட்டியின் மையக்களமாக இந்து சமுத்திரம் தோற்றம் பெற்று விட்டது.
இந்தப் பின்னணியில்தான் சீனா தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தி அங்கிருந்து பெருமளவு எண்ணெய் வளத்தை கொள்வனவு செய்யவும் தனது முதலீடுகளை ஆரம்பிக்கவும் தொடங்கிவிட்டது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க கண்டம் அமெரிக்காவின் பாதுகாப்பு வலையம் என்றும், அது அமெரிக்கர்களுக்கே சொந்தம் என்றும் இருந்த நிலைமையை உடைத்தது போன்ற செயலாகவே வெனிசுலா நாட்டின் சீன உறவு அமைந்து விட்டது. இதற்கு முன்னர் கியூபா தீவு சோவியச் சார்பாக இருந்த வேலை அமெரிக்கா அன்று சமாச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் கியூபா தீவாக இருந்தது. எப்போதும் தீவில் உள்ளவனுக்கு தீவு சொந்தமாகிறது.
அது அவனுக்கு பலமாகவே அமையும். ஆனால் வெனிசுலா நிலத் தொடர்புள்ள நாடு ஆகவே அது தன்னை அமெரிக்க கண்டத்தில் ஐக்கிய அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டு தன்னை தற்காத்துக் கொள்வது என்பது இலகுவான காரியம் அன்று.
அமெரிக்காவின் தேசிய நலன் என்பது உலகளாவிய மூல வளங்களை சுரண்டி அமெரிக்காவுக்கு கொண்டு செல்வது தான். அவ்வாறு கொண்டு செல்வதற்கு தடையாக எந்த நாடு இருந்தாலும் அவற்றை ஓரங்கட்டி முடக்கும். உலகளாவிய மூளவளங்களை சுரண்டி செல்வதன் மூலமே தனது பொருளாதாரத்தை பலப்படுத்தி உலகை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.
அதற்காகவே தான் உலகம் தழுவிய அரசியலில் அது தனக்கு சவாலாக எழக்கூடிய அனைத்து நாடுகள் மீதும் தனது ராணுவ பலத்தையோ, பொருளாதார பலத்தையோ, அல்லது சர்வதேச நிறுவனங்கள் தனது கூட்டு நாடுகள் மூலமாக பொருளாதாரத் தடைகளை விரிப்பதன் மூலமோ அது கட்டுப்படுத்தும். அவ்வாறுதான் இப்போது ஈரான் மீது அது பொருளாதாரத் தடையை விரிப்பதும், ஈரானுடைய அணுசக்திக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வதும். ஈரான. தன்னை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்கிறது.
ஆயினும் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து விட்டால் ஈரானுடைய பெருமளவு எண்ணெய் வளத்தை அமெரிக்காவால் சுரண்டி அமெரிக்க தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அமெரஜகஹ்காவுக்கு எதிராக இருக்கின்ற இஸ்லாமிய உலகத்துக்கு ஈரான்தான் தலைமை தாங்குகிறது. ஈரானை முடக்குவதன் மூலம் நேரடியாக அமெரிக்காவுக்கு எதிராக இருக்கின்ற சக்திகளை அனைத்தையும் முடக்க அது எண்ணுகிறது.
இப்போது விடயத்துக்கு வருவோம் இன்றைய உலக அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற கொதிநிலை என்பது மூல வளங்களை யார் கைப்பற்றுவது என்பதுதான். அனைத்து ஜீவராதிகளும் சுயநலமானவை. அவை சுயநலமாகவே தொழிற்படும். சுயநலமாக வாழ்ந்தால் மாத்திரமே உயிர் வாழ்வு நிலைபெறும்.
உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர் வாழ்வு என்பதே உயிரியல் தத்துவம். அவ்வாறாயின் நாடுகளும் நாடுகளை அடக்கி ஒடுக்கி உண்டு வாழ்வதே அரசியல் வாழ்வாக அமையும். ஆகவே பேரரசுகள் சிறிய அரசுகளை விழுங்கும், நசுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் என்பதே தத்துவார்த்த உண்மையாகும். ஆகவே அரசு என்பது பலாதாரம், வன்முறை, ஆக்கிரமிப்பு, யுத்தம், படுகொலை என அனைத்தையும் செய்கின்ற ஒரு இயந்திரம்.
அதற்கு நீதியுமில்லை, நியாயமில்லை. அது தனது நலனுக்காக சட்டங்களையும், ஒழுங்குகளையும் விதிக்கும். தான் ஏற்படுத்துகின்ற சட்டங்களும், ஒழுங்கு விதிகளும் தனக்கு நலன் பயக்கவில்லை என்றால் அந்த சட்டங்களையும், ஒழுங்கு விதிகளையும் அது தானாகவே மீறும் அல்லது தான் விதிக்கின்ற சட்டங்கள், ஒழுங்குகளுக்குள்ளும் அதனை மீறுகின்ற ஏற்பாடுகளையும் தானே செய்து வைக்கும். இதுவே உலகளாவிய அரசியல் சட்டங்களாகவும், ஒழுங்கு விதிகளாகவும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே அரசுகள் ஆயினும் சரி நாடுகளாயினும் சரி இனக்குழுக்களாயினும் சரி தனித்தனி மனிதர்களாயினும் சரி அனைத்தும் நலன் சார்ந்ததே. தமிழிலே "தாயும் பிள்ளையாயினும் வாயும் வயிறும் வேறானது" என்ற பழமொழி இந்த தத்துவ தத்துவார்த்த உண்மையை விளக்கப் போதுமானது.
உலகளாவிய அரசியல் பொருளியலில் சமபலம் படைத்த வர்க்கம் தோன்றுகின்ற போது அல்லது நாடுகள் தோன்றுகின்ற போது செல்வங்களை கொள்ளையிட முடியாது. செல்வங்களை கொள்ளையிட போர் புரிவதனால் ஏற்படும் செலவைவிட பணப் பரிமாற்றத்தின் மூலம் பொருட்களை பெறுவது லாபகரமாக தோன்றிய போது வர்த்தகம் தோன்றியது. வர்த்தகம் சரியாக இயங்குவதற்கு அமைதி வேண்டும் இந்த அமைதியை பேணுவதற்கு ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் பொருளீட்டுவதற்கு ஒரு சாராருக்கு வர்த்தகம் பாதகமாக அமைகின்ற போது அதாவது லாபம் ஈட்டப்பட முடியாத போது லாபத்தை ஈட்டுவதற்கு அதாவது லாபம் என்ற நலனை அடைவதற்கு போர் தவிர்க்க முடியாதாகிறது. அதுவே இப்போது அமெரிக்காவுக்கு எழுந்திருக்கிறது. தனக்குரிய லாபத்தை தன்னால் சம்பாதிக்க முடியாத போது அது போருக்கு செல்கிறது. ஆகவே வர்த்தகமும் போரும் இணை பிரியாதவை, வர்த்தகத்தின் மாற்று வடிவமே போர். யுத்தத்தின் பிரதியீடுதான் வர்த்தகம்.
அதுவே இன்றைய உலகளாவிய அரசியல் கொதிநிலை வெளிப்பாடு. இத்தகைய உலகளாவிய அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டு விடுதலைக்காக போராடும் தமிழ்த் தேசிய இனம் இந்த உலகளாவிய அரசியல் சூழலை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய இந்த சூழமைவு என்பது ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான புதிய பாதையை திறக்கக்கூடிய பல வசதிகளையும், வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. இந்துசமுத்திரத்தில் வலுச்சமநிலையை மாற்றுவதற்கான போட்டோ போட்டியிலும் தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பு கேந்திரத் தன்மை பெற்றிருப்பதனால் அதனையே முதலீடாக்கி தமிழர்களுக்கான அரசியல் உரிமை மீட்டெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனை ஈழத் தமிழர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 28 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri