தலைமன்னார் - தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற பெண்
இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்திச் சென்று சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் 17 வயது மகளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்தபோதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
தலைமன்னாரில் இருந்து ஆரம்பம்
இதற்கு முன்னரும் கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில், நீந்துவதற்கு பார்வை குறைபாடு தடையல்ல என்பதை வலியுறுத்தும் நோக்கில், இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலான பாக் நீரிணை கடலை நீந்திக் கடக்க இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.
அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் (06.04.2026) மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவுடன் தலைமன்னாருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
நேற்று (07.04.2026) அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியை வந்தடைந்தார்.
11 மணி நேரம் நீந்திய மாற்றுத்திறனாளி
தொடர்ந்து 11 மணி 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்துள்ளார். இதன் மூலம் பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும் அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்திருந்தார்.
மேலும், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் என்பவர் கடந்த 05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்திக் கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri