நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறை தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவமானது, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு எதிர்த்தரப்புக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலினால் தூண்டப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இது தொடர்பான விரிவான விசாரணைகள் இன்னும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், இறுதி முடிவுகள் எதற்கும் இன்னும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:- "கடந்த ஜூலை 5ஆம் திகதி இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட ஆரம்பகட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்தமையுடன் மேலும் 35 பேர் காயமடைந்தனர். அன்றைய தினம் மாலையே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகள்
எனினும், மறுநாள் காலை கைதிகள் காலை உணவை உட்கொண்ட பின்னர், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் பாரிய வன்முறை வெடித்தது.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய கைதிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறான தகவல் வழங்குநர்கள் பொதுவாகக் குற்றக் கும்பல்களினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். இந்த வன்முறைக்குப் பின்னாலுள்ள சாத்தியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
எனினும், இவை தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலான முதற்கட்டக் கண்டுபிடிப்புகள் மட்டுமேயாகும். இது தொடர்பான இறுதி முடிவுகள், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
பாதுகாப்பு அமைப்புக்கள்
வன்முறையின் போது ஒரு சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினர், சிறைச்சாலையிலிருந்த சிசிரிவி கமராக்கள் மற்றும் உடல் சோதனைக் கருவிகளைத் திட்டமிட்டு நாசம் செய்துள்ளனர்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கும் நோக்கிலேயே அவர்கள் இதனைச் செய்துள்ளனர். இந்த வன்முறையில் அனைத்துக் கைதிகளும் ஈடுபடவில்லை. காயமடைந்தவர்களில் பலர் அப்பாவி கைதிகள்.
மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற ஆயுதங்களற்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் இந்தக் கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. தங்களது சக அதிகாரிகளைப் பாதுகாக்க முயன்ற போதே பல அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர், சிறையின் இரும்பு வாயிலை உடைத்துக் கொண்டு கைதிகள் மற்றொரு வெளியேறும் வழியை நோக்கி முன்னேறியுள்ளனர். ஒருவேளை அவர்கள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கும்.
இதேவேளை, இந்த வன்முறையின் போது சில கைதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன." என்றார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan