கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர்
நீண்டகாலமாக தான் தங்கியிருந்த விகாரையை விட்டு வெளியேறி, தனது சகோதரரின் இல்லத்தில் தஞ்சமடைந்திருந்த ராஜாங்கனை சத்தாரதன தேரரை, கிராம மக்கள் பேருந்துகளில் திரண்டு சென்று மீண்டும் விகாரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் அண்மையில் தான் வசித்த விகாரையில் இருந்தும் வெளியேறியிருந்தார்.
ராஜாங்கனை சத்தாரதன தேரர்
விகாரையின் அறங்காவலர்கள் மற்றும் கிராம மக்களது தடையையும் மீறி, உயிரச்சுறுத்தல் தொடர்பில் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே தான் தற்காலிகமாக வெளியேறியிருந்ததாக இராஜாங்கனை சத்தாரதன தேரர் திங்கட்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
சத்தாரத்ன தேரர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
விகாரையில் தனியாக இருந்து சமூக ஊடகப் பணிகளைச் செய்து வந்த என் மீது, பிரபல வர்த்தகரொருவர் மற்றும் வன்முறைக் கும்பல்களும் திட்டமிட்டு இரண்டு முறை தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

அண்மையில் இரவு 10.30 மணியளவில் முகம் தெரியாத குழுவொன்று விகாரைக்குள் புகுந்து என்னைக் கொலை செய்ய முயன்றனர்.
முதலாம் நாள் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடுகின்றனர்.
எனவே, பொலிஸ்மா அதிபர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு அவர்களைக் கைது செய்ய வேண்டும். நாம் துறவிகள் என்ற ரீதியில் பழிவாங்க நினைப்பதில்லை. ஆனால், இன்று எனக்கு நடந்த கொடுமை நாளை மற்றுமொரு துறவிக்கும் நேரலாம்.
நான் விகாரைக்குச் சென்று பணம் சம்பாதிக்கத் துறவறம் பூணவில்லை. எனது தந்தை இரு கண்களும் தெரியாதவர், தாய் விவசாயம் செய்து எங்களை வளர்த்தாள்.
சகோதரனின் இல்லம்
ஏழையாக இருந்தாலும் எவ்வித இலாப நோக்கமும் இன்றி எனது முழு வாழ்க்கையையும் சாசனத்துக்காகவும் நாட்டு மக்களுக்காகவுமே தியாகம் செய்துள்ளேன். தற்போது எனது இரு முதன்மை சமூக ஊடகக் கணக்குகளும் தீயவர்களால் முடக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன.
என்னிடம் தற்போது எஞ்சியிருப்பது இந்தத் துறவற ஆடை மட்டும்தான். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் வேறு வழியின்றி எனது சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்தேன். இன்று எனது விகாரையின் அறங்காவலர் சபை எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர்.

அவர்களின் வார்த்தைகளை நம்பியே, இன்று எனது கிராம மக்களுடன் மீண்டும் விகாரைக்கு எழுந்தருளத் தீர்மானித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கிராமவாசிகள் கருத்துத் தெரிவிக்கையில், 'கடந்த 20 வருடங்களாக எமது கிராமத்துக்கும் ஏழை மக்களுக்கும் தேரர் ஆற்றிய சேவைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காட்டுயானைகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியதுடன், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராகவும் துணிச்சலுடன் களமிறங்கி எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.
தனக்கென சொத்துக்களைச் சேர்க்காமல், தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு 10 முதல் 15 பிள்ளைகளைக் கொண்ட ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.இந்த உன்னத துறவியைக் காப்பது எமது கடமையாகும்' எனத் தெரிவித்துள்ளனர்.
You May Like This..
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam