நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் வழங்கிய விளக்கம்..
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் கட்டமைப்புச் சட்டம், அரசாங்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வூதியக் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆகவும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆகவும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அத்துடன், நீதித்துறை கட்டமைப்பில் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக அத்தகைய இரு மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், மூன்று வணிக மேல்நீதிமன்றங்கள் ஐந்து வணிக மேல்நீதிமன்றங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்காக எட்டு மேல்நீதிமன்றங்கள் பதினொன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேல்நீதிமன்றத்தின் இலக்கம் 06, 10, 11 ஆகிய அறைகளில் லஞ்ச ஊழல் வழக்குகள் தினமும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் வழக்குகள் ஒரேயொரு நீதிமன்றத்திலேயே விசாரணை செய்யப்பட்டு வந்தன. தெய்யந்தர, அங்குணுகொலபெலஸ்ஸ, பிபில, கல்கமுவ போன்ற 08 நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்,
உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி, கம்பஹா, அனுராதபுரம், அம்பாறை நீதிமன்றங்கள் மீள செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
புத்தளம், வெல்லவாய, ஹட்டன் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.